விவசாயிகள் தற்கொலை: காங். மேலிட செயலர் செல்லக்குமாருடன் சித்தராமையா மோதல்! ராகுல் வரவும் எதிர்ப்பு!
பெங்களூரு: விவசாயிகள் தற்கொலை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் டாக்டர் செல்லக்குமாருக்கும் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கும் இடையே மோதல் வெடித்திருப்பது கர்நாடகா காங்கிரஸ் கமிட்டியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விவசாயிகள் பிரச்சனையை முன்வைத்து கர்நாடகாவில் ராகுல் சுற்றுப் பயணம் மேற்கொள்வதை முதல்வர் சித்தராமையா விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.
கர்நாடகா மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை தொடர் கதையாகி வருகிறது. இந்த விவகாரத்தை முதல்வர் சித்தராமையா சரியாகக் கையாளவில்லை என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதனால் மாண்டியா மற்றும் மைசூரு மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்யவும் ராகுல் திட்டமிட்டிருக்கிறார். இதற்கு முன்னதாக அந்த மாவட்டங்களுக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்து வருமாறு தமிழகத்தைச் சேர்ந்தவரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளருமான டாக்டர் செல்லக்குமாரை பெங்களூருவுக்கு ராகுல் அனுப்பி வைத்தார்.
கடந்த 13-ந் தேதியன்று பெங்களூரு வந்திருந்த செல்லக்குமார், கர்நாடகா காங்கிரஸ் கட்சித் தலைவர் பரமேஸ்வருடன் இந்த இரு மாவட்டங்களுக்கு செல்லவும் முடிவு செய்திருந்தார். ஆனால் முதல்வர் சித்தராமையாவோ தாம் இன்னும் அந்த மாவட்டங்களுக்கு செல்லவில்லை; அதனால் இப்போது அங்கு செல்வது சரியான நேரமில்லை எனக் கூறி தடுத்திருக்கிறார்.
மேலும் தற்போது சட்டசபைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால்தான் என்னால் செல்ல இயலவில்லை.. தவறாக நினைக்க வேண்டாம் எனவும் சித்தராமையா கூறியுள்ளார். ஓரிரு நாட்களில் இரு மாவட்டங்களுக்கும் நேரில் சென்று பார்வையிடுவதாகவும் சித்தராமையா உறுதியளித்திருக்கிறார்.
இது ராகுல் காந்திக்கு தெரிவிக்கப்பட்டதுடன், நீங்கள் இந்த மாநிலத்துக்கு வருகை தருவதை முதல்வர் சித்தராமையா விரும்பவில்லை என்ற தகவலும் 'பாஸ்' செய்யப்பட்டுவிட்டதாம்..
இதனால் தற்போது சித்தராமையா மீது காங்கிரஸ் தலைமை கடும் அதிருப்தியில் இருக்கிறது என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications