குண்டுவெடிப்பு வழக்கில் சாமியாரை விடுவித்த நீதிபதி பாஜகவில் இணைகிறார்!
Recommended Video
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்தனை பேரையும் விடுவித்து தீர்ப்பளித்த நீதிபதி பாஜகவில் இணையப் போகிறார்.
இந்த நீதிபதியின் பெயர் ரவீந்தர் ரெட்டி. தற்போது தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். இவர் ஹைதராபாத் பெருநகர செஷன்ஸ் நீதிபதியாக இருந்தவர். கடந்த ஏப்ரல் 16ம் தேதி இவர் முக்கியமான மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பளித்தார். அப்போது சாமியார் அசீமானந்த் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரையும் விடுதலை செய்து அதிரடியாக தீர்ப்பளித்தார்.
தீர்ப்பளித்த கையோடு தனது பதவியை ராஜினாமா செய்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் கடிதம் எழுதி விலகினார். இந்த நிலையில் தற்போது இவர் பாஜகவில் இணையவுள்ளார். இது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தலைவர் அமித் ஷாவை இவர் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது தெலங்கானா பாஜக தலைவர் டாக்டர் கே.லட்சுமணும் உடன் இருந்தார். அந்த சமயத்தில்தான் தான் பாஜகவில் இணையவுள்ளதாக தெரிவித்தார் ரெட்டி.
2007ம் ஆண்டு மே 18ம் தேதி மெக்கா மசூதியில் குண்டு வெடித்தது. இந்த வழக்கில் சுவாமி அசீமானந்த் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் அனைவரையும் விடுவித்த நீதிபதி ரெட்டி, யாரா் மீதான குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்று அதிரடியாக கூறியிருந்தார். ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் என்பதற்காக அவரை தீவிரவாதத்தில் ஈடுபடுவர் என்று கூற முடியாது என்றும் நீதிபதி தனது தீர்ப்பின்போது தெரிவித்திருந்தார்.
ரெட்டி பதவியில் இருந்தபோது அவர் மீது சில சர்ச்சைகளும் இருந்தன. அதுதொடர்பாக ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் விசாரணையும் நடத்தி வந்தது என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் ரெட்டி பாஜகவில் சேரப் போவதாக கூறியுள்ளார்.