ஜெயலலிதா அப்பீல் மனு: தீர்ப்பு தேதி நாளை மாலை வெளியாக வாய்ப்பு!
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தேதியை, கர்நாடக ஹைகோர்ட் நாளை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கர்நாடக ஹைகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள அப்பீல் மனு மீதான தீர்ப்பு வரும் 11ம் தேதிவெளியாக உள்ளதாக கர்நாடக ஹைகோர்ட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படும் நிலையில், தீர்ப்பு தேதி நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு சுமார் பதினெட்டு வருடங்களாக நடைபெற்றது. முதலில் தமிழகத்திலும், அதன்பிறகு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திலும் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி, தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஜெயலலிதாவுக்கு தண்டனை
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய நால்வரும் இவ்வழக்கில் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் ஜெயலலிதாவுக்கு நான்காண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. மற்றமூவருக்கும், 4 ஆண்டு சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன்
இதைத் தொடர்ந்து உடனடியாக ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டார். உயர்நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை நிராகரித்ததை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார் ஜெயலலிதா. அக்டோபர் 17ம்தேதி, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் ஜாமீன் கிடைத்தது. இதன்பிறகு உச்சநீதிமன்றம் மே 12ம் தேதி வரைக்கும் ஜாமீனை நீட்டித்துள்ளது.
தீர்ப்பு ஒத்திவைப்பு
இந்நிலையில், ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளும் ஹைகோர்ட்டில் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தலைமையிலான சிறப்பு அமர்வு விசாரித்து வந்தது. இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த மார்ச் 11ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து நீதிபதி குமாரசாமி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
அன்பழகன் மனு
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜரான பவானி சிங் நியமனத்தை எதிர்த்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு பரிந்துரை செய்தது. மேலும், ஜெயலலிதா மேல் முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு மே 12ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.
பவானிசிங் நியமனம் செல்லாது
பவானிசிங் நியமனம் பற்றி விசாரித்த 3 நீதிபதிகள் பெஞ்ச் ஏப்ரல் 27ம் தேதி தீர்ப்பு வழங்கியது. பவானி சிங்கின் நியமனம் செல்லாது என தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு எழுதும்போது பவானி சிங் வாதத்தை கருத்தில் கொள்ளக்கூடாது. மாறாக திமுக தரப்பு, கர்நாடக அரசு தரப்பின் எழுத்துப்பூர்வ வாதத்தை கருத்தில் கொண்டு தீர்ப்பு எழுத வேண்டும் என உத்தரவிட்டது. எனவே திமுக தரப்பு மற்றும் கர்நாடக அரசு தரப்பு தங்கள் வாதங்களை சமர்ப்பித்தனர்.
மே 11ல் தீர்ப்பா?
இந்த வாதங்களை பரிசீலித்து வரும் குமாரசாமி, மே 12ம் தேதிக்குள் எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வழங்க வாய்ப்பு இருந்தது. ஹைகோர்ட்டில் இருந்து வரும் தகவல்கள் படி, தீர்ப்பு 11ம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது. தீர்ப்பு வெளியாகும்போது, அதுகுறித்து ஒருநாள் முன்பாக ஹைகோர்ட் வழக்கு பட்டியலில் தகவல் தெரிவிக்கப்படும்.
நாளை தீர்ப்பு தேதி?
திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தால், அதுகுறித்து, நாளை மாலை ஹைகோர்ட் ஊழியர்கள் தயாரிக்கும் வழக்குப்பட்டியலில் அந்த தகவல் இருக்கும். ஏனெனில், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஹைகோர்ட்டுக்கு விடுமுறை என்பதால், திங்கள்கிழமைக்கான வழக்கு பட்டியல், நாளையே வெளியிடப்படுவதுதான் வழக்கம்.
மாலையிலிருந்து, இரவுக்குள்
வழக்கு பட்டியல் விவரம் மாலை 4.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் வாய்ப்புள்ளது. கோர்ட் அலுவல்கள் மாலை 4.30 மணிக்கு முடிந்த பிறகு, ஊழியர்கள் இரவு 7.30 மணிவரை கோர்ட்டில் இருப்பார்கள். எனவே, இந்த கால இடைவேளைக்குள் தீர்ப்பு தேதி பற்றிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை, தீர்ப்பை மே 11ம்தேதி வழங்க குமாரசாமி ஆயத்தமாகவில்லை என்றால், நாளை தீர்ப்பு தேதி வெளியாகாது. ஆனால், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி, மே 11ம் தேதி தீர்ப்பு வெளியாக உள்ளதாக டிவிட் செய்திருந்தது நினைவிருக்கலாம்.