சூடுபிடிக்கிறது ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு.. அடுத்த மாதமே வெளியாகிறது தீர்ப்பு?
டெல்லி: பிப்ரவரி மாதத்திலேயே வாத, பிரதிவாதங்களை பூர்த்தி செய்துவிட்டு, சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு எழுத உச்சநீதிமன்றம் தயாராகிவருவதாக சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் கர்நாடக ஹைகோர்ட்டில் செய்த மேல்முறையீட்டின்போது, தனிக்கோர்ட்டு தீர்ப்பை நீதிபதி குமாரசாமி ரத்து செய்ததுடன், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார்.
இதனை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றது. விசாரணையை ஜனவரி 8ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

நீதிபதிகள்
இந்தநிலையில், சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்கும் விசாரணை நீதிபதி மாற்றம் செய்யப்பட்டார். நீதிபதி ஆர்.கே அகர்வாலுக்கு பதிலாக அமித்வா ராய் விசாரிப்பார் என்று தெரிவிக்கப்படுள்ளது. மற்றொரு நீதிபதியாக பினாகி சந்திரகோஷ் தொடர்கிறார்.

பிப்ரவரி 2 முதல் அனல்
இந்த விசாரணை கடந்த 8ம் தேதி நீதிபதிகள், பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதிகள், "ஜெயலலிதா உள்ளிட்டோர் சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு, அன்பழகன் ஜெயலலிதா ஆகியோர் பதில் அளிக்க வேண்டும். பிப்ரவரி 2ம் தேதிக்கு முன்பாக பதில் அளிக்க வேண்டும். அதில் விசாரணையின்போது எந்தெந்த அம்சங்களில் சந்தேகம் உள்ளதோ அந்த விஷயங்களை மட்டும் தெரிவித்து, பதில் இருக்க வேண்டும். பிப்ரவரி 2ம் தேதி முதல் இறுதி விசாரணை நடத்தப்படும்" என கூறினர்.

முத்தரப்பும் தாக்கல்
இதையடுத்து முதலில் கர்நாடக தரப்பும், பின்னர், ஜெயலலிதா தரப்பும், மூன்றாவதாக அன்பழகன் தரப்பும், தங்கள் பதில் மனுக்களை தாக்கல் செய்துவிட்டன. எவற்றையெல்லாம் விசாரிக்க வேண்டும் என்ற பாயிண்டுகளை மட்டுமே இத்தரப்புகள் தெரிவித்துள்ளதால், சிறப்பு நீதிமன்றத்தில் நடந்ததை போல அதிக காலத்திற்கு வழக்கு இழுத்தடிக்கப்பட தேவையில்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

கூட்டல சரி செய்யுங்க
கர்நாடக அரசுத் தரப்பின் மனுவில், விசாரிக்க வேண்டிய 16 பாயிண்டுகளைக் குறிப்பிட்டுள்ளனர். அதில், நீதிபதி குமாரசாமி போட்ட கூட்டல் கணக்கில் தவறு இருக்கிறது என்றும், அவ்வாறு கணக்கை சரி செய்துவிட்டால், ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக 76% சொத்துக்களை குவித்திருப்பது உறுதியாகிவிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்படி வருமானமானது?
ஜெயலலிதா பிறந்தநாள் பரிசாக ஒன்றரை கோடி வெளிநாட்டு டாலர் வந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரித்துவரும் நிலையில் அதையும், ஜெயலலிதா வருமானக் கணக்கில் நீதிபதி குமாரசாமி சேர்த்தது முறையாகாது என்றும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது'

ஜெ. தரப்பு கறார்
அன்பழகன் தரப்பும், கணக்கு தவறுகளை சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால், ஜெயலலிதா தரப்போ, இதில் கர்நாடகா விசாரிக்க உரிமையே கிடையாது என்று கூறி பதில் தாக்கல் செய்துள்ளது. மேலும், கணக்கு தப்பாகவே இருந்தாலும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிக்கவில்லை என்று ஜெ. தரப்பு குறிப்பிட்டுள்ளது.

விவரம் தெரிந்த நீதிபதிகள்
இந்த வழக்கு குறித்த தகவல்கள், விசாரணை நீதிபதிகளுக்கு ஏற்கனவே தெரியுமாம். ஏனெனில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய போது, ஜெ. வழக்கில் தற்போது கர்நாடகாவுக்காக ஆஜராகும், மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா அங்கு அரசு வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். அதனால், முன்பே தாக்கூருக்கு, ஜெயலலிதா வழக்கு விவரம் தெரியும் எனக் கூறப்படுகிறது.

வழக்கில் தெளிவு
மேலும், தற்போது உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றும் கோபால கவுடா, கர்நாடகாவைச் சேர்ந்தவராகும். தலைமை நீதிபதி தாக்கூரோடு சேர்ந்து, கோபால கவுடா பல வழக்குகளை விசாரித்திருக்கிறார். இவர் மூலமும் விபரங்கள் தாக்கூருக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி அமித்வராய் உடனும் கோபாலகவுடா பல வழக்குகளை இணைந்து நடத்தியிருக்கிறார். இவையெல்லாம், ஜெ. வழக்குகள் குறித்த பரிட்சையத்தை நீதிபதிகளுக்கு வழங்கியுள்ளன.

விரைந்து தீர்ப்பு
எனவே, புதிதாக எதையும் தேடி அறிய வேண்டிய சூழல் இல்லாததால், விசாரணையை விரைந்து நடத்தி, தீர்ப்பை வழங்க நீதிபதிகள் தயாராகிவிட்டதாக சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சொத்துக்குவிப்பு வழக்கின், இறுதி வாதத்தை பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் கர்நாடக அரசு தரப்பு சமர்ப்பிக்க நேரம் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளுக்கு ரெண்டு நாள்
கர்நாடக தரப்பு வாதத்தை முன்வைத்த பிறகு, 2 நாட்கள் தி.மு.க. தரப்பிற்கும், அதன்பிறகு 2 நாட்கள் ஜெயலலிதா தரப்பிற்கும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து சில நாட்கள் தீர்ப்பு எழுத எடுத்துக்கொள்ளப்பட்டு, தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. எனவே ஜெயலலிதா தரப்பில் பதற்றம் தொற்றியுள்ளதாம்.












Click it and Unblock the Notifications