சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்காதது தீண்டாமைக்கு ஈடானது.. நீதிபதி திட்டவட்டம்!
டெல்லி: மாதவிடாய் காலத்தை கருத்தில் கொண்டு பெண்களை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனுமதிக்காமல் இருப்பது என்பது ஒருவகையில் தீண்டாமை பழக்கத்திற்கு ஈடானது என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஜெ.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்காமல் தடை விதிப்பதற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
[சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கூடாது.. தனித்து தீர்ப்பு கூறிய பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா!]
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில், பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா தவிர மற்ற நான்கு நீதிபதிகளும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கினர்.

பிரம்மச்சரியம்
அதில் நீதிபதி சந்திரசூட் உள்ளிட்ட ஒவ்வொரு நீதிபதிகளுமே தங்களது கருத்துக்களையும் தீர்ப்பின்போது தனித்தனியாக தெரிவித்தனர். நீதிபதி, சந்திரசூட் கூறுகையில், மதத்தின் பெயரால் பெண்களின் வழிபடும் உரிமையை தடுக்க முடியாது. ஆண்களின் பிரம்மச்சரிய விரதத்தை பெண்களின் வருகை தொந்தரவு செய்யக் கூடும் என்று வாதம் முன்வைக்கப்பட்டது.

தீண்டாமை
உடலியல் தொடர்பான விஷயங்கள் ஒருவர் உரிமையை தடுக்க முடியாது. எனவே பெண்களின் உடல்நிலையை விரதம் இருப்பதற்கு ஏற்புடையது அல்ல என்று கூறுவதை ஏற்க முடியாது. பெண்கள் உடல் நிலையை காரணம் காட்டி கோவிலுக்குள் அனுமதி மறுப்பது என்பது ஒருவகையில் தீண்டாமை வழக்கத்தை போன்றதாகும்.

அடிப்படை உரிமை
எந்த ஒரு பழக்கமாவது மனிதர்களின் அடிப்படை உரிமையை தகர்க்கக் கூடியதாக இருந்தால், அந்தப் பழக்கம் அகற்றப்பட வேண்டியது. இவ்வாறு சந்திரசூட் தெரிவித்தார்.

தனி மதம் இல்லை
இந்த அமர்வில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, நாரிமன், ஐயப்ப வழிபாடு என்பது தனி மதம் கிடையாது. அது இந்து மதத்தின் ஒரு அம்சம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications