சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதியை சந்தித்தார் சர்ச்சைக்குரிய நீதிபதி கர்ணன்!
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூரை சர்ச்சைக்குரிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் நேற்று சந்தித்து விளக்கம் அளித்தார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் அடிபடுபவர். நீதித்துறை பணியிடங்கள் நியமன விவகாரத்தில் இவர் பிறப்பித்த தடை உத்தரவால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதி கர்ணனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் முறையிட்டார். இந்நிலையில் நீதிபதி கர்ணனனை கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாக்கூர் இடம் மாற்றம் செய்தார். இதற்கும் அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் இந்த இடமாற்றல் உத்தரவுக்கும் தடை உத்தரவு பிறப்பித்தார்.
அத்துடன் இந்த உத்தரவு குறித்து தலைமை நீதிபதி எழுத்துப்பூர்வமாக விளக்கம் தரவும் கர்ணன் உத்தரவிட்டிருந்தார். இதனால் பெரும் சர்ச்சை வெடித்தது.
இந்நிலையில் டெல்லி சென்ற நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.