சொத்துப் பிரச்சினையா... அதனால் கொலையா.. கலாபவன் மணி வழக்கில் இடியாப்பச் சிக்கலில் போலீஸ்!
திருவனந்தபுரம்: நடிகர் கலாபவன் மணியின் கோடிக் கணக்கான சொத்துக்கள் யார், யாரிடம் உள்ளது அவற்றை யாராவது அபகரித்துவிட்டார்களா என்று கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நடிகர் கலாபன் மணி கல்லீரல் பிரச்சனையால் மரணம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பு அருந்திய மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து இருந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மணியை யாராவது திட்டமிட்டு கொலை செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சொத்து
கலாபவன் மணிக்கு கோடிக் கணக்கில் சொத்து இருப்பதாக திருச்சூர் மாவட்ட போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த சொத்துக்களை யாராவது அபகரித்துள்ளனரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணிக்கே
மணி பெரும்பாலான சொத்துக்களை பினாமிகளின் பெயரில் வாங்கியுள்ளார். மேலும் பினாமிகளிடம் ஏராளமான பணத்தையும் கொடுத்து வைத்துள்ளார். அவரது பணம் யார், யாரிடம் எவ்வளவு உள்ளது என்ற விபரம் மணிக்கே தெரியாதாம்.
பணம்
தன்னை படங்களில் நடிக்க வைக்க, நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செய்ய அழைத்து வந்தோரிடம் மணி நேரடியாக பணத்தை பெற்றது இல்லையாம். மாறாக தனது பினாமிகளின் வங்கி கணக்கு விபரங்களை அளித்து அதில் செலுத்துமாறு தான் கூறி வந்துள்ளார்.
மனைவி, மகள்
உடல் நலக் குறைவு காரணமாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த மணி நெடுங்காலமாக வீட்டிற்கே செல்லவில்லையாம். மனைவி, மகளை பார்க்காமல் இருந்துள்ளார். சினிமாவை விட்டுவிட்டு வியாபாரம் துவங்க மணி திட்டமிட்டதாக அவரது உதவியாளர்கள் 3 பேர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.