நன்றி நண்பா.. இறப்பதற்கு சில நிமிடங்கள் முன்பு, பாதுகாவலருக்கு நன்றி தெரிவித்து மாண்பு காட்டிய கலாம்
டெல்லி: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், இந்திய மேலாண்மை நிறுவன (ஐ.ஐ.எம்.) விழாவில் பங்கேற்பதற்காக திங்கள்கிழமை மாலை குவாஹாட்டியிலிருந்து ஷில்லாங்குக்கு சாலை வழியாக சென்றார்,
அந்தப் பயணத்தின் போது அவரது பாதுகாப்புக்கென சிறப்பு பாதுகாப்புப் படைக் குழுவும், பல வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டன. சுமார் இரண்டரை மணி நேர சாலை பயணம் அது. அப்போது, கலாம் பயணித்த வாகனத்துக்கு முன்பாக, திறந்த நிலையிலான ஜிப்ஸி வாகனம், பாதுகாப்புக்குச் சென்றது. அதில் 3 ஆயதமேந்திய சிறப்பு பாதுகாப்புப் படைக் காவலர்கள் சென்றனர்.

அந்த மூவரில் ஒரு பாதுகாவலர் துப்பாக்கி ஏந்தியவாறு நின்றபடியே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டார். நின்றபடியே வந்தால்தான், சுற்றும் முற்றும் பார்த்தபடி பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்பதால் அந்த வீரர் மட்டும் நின்றபடி வந்தார்.
அதை தனது காரில் இருந்தபடியே கண்ட அப்துல் கலாம், நின்றவாறு வந்த பாதுகாவலரை அமர்ந்து வருமாறு, வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவிக்க உதவியாளரை பார்த்துச் சொன்னார். ஆனால் காட்டுப்பகுதியில் வாக்கி டாக்கி இணைப்பு கிடைக்கவில்லை.
உதவியாளர், கை சைகை மூலமாவது அந்த காவலரை அமரச் செய்வார் என்று கலாம் எதிர்பார்த்தபடியே இருந்தார். ஆனால் அதுவும் நடக்கவில்லை. அந்தக் காவலர் பயணம் முழுவதும் நின்றவாறு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டார்.
அப்துல் கலாம் ஷில்லாங் வந்து சேர்ந்த பிறகு, நின்றவாறு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட அந்தப் பாதுகாவலரை தன்னை வந்து பார்க்குமாறு உதவியாளரிடம் சொல்லி அனுப்பினார்.
நேரில் அவரை சந்திக்கச் சென்ற அந்தக் காவலருக்கு கைகுலுக்கி 'நன்றி நண்பா' என்று கலாம் கூறினார். அதுமட்டுமல்லாமல், தனது பாதுகாப்புக்காக அந்தக் காவலர் நீண்ட நேரம் நின்று கொண்டே வர நேர்ந்ததற்கு, கலாம் அவரிடம் மன்னிப்பு கோரினார்.
கலாமின் இந்த பண்பை பார்த்து காவலருக்கு பேச முடியாமல் வார்த்தை திக்கிவிட்டது. பாதுகாவலர்களை துச்சமாக மதித்து தாண்டிச் செல்லும் அரசியல்வாதிகளையே பார்த்து பழகிய அந்த வீரர் கலாமின் மாண்பை பார்த்து மெய்சிலிர்த்தபடி நின்றார். இருப்பினும் தடுமாறியபடியே, "உங்களுக்காக 6 மணி நேரமானாலும் நின்றபடி பாதுகாப்பு கொடுப்பேன் சார்" என்று அந்த காவலர் பதில் சொன்னார். இவ்வாறு கலாமின் உதவியாளர் ஸ்ரீஜான் பால் சிங் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications