மீத்தேன் திட்டத்துக்கு ராஜ்யசபாவில் கனிமொழி எதிர்ப்பு- அ.தி.மு.க. அமளி- வெளிநடப்பு!!
டெல்லி: மீத்தேன் திட்டத்தை எதிர்த்து ராஜ்யசபாவில் தி.மு.க. எம்.பி. கனிமொழி எதிர்ப்பு தெரிவித்து பேசிய போது அண்ணா தி.மு.க. எம்.பிக்கள் குறுக்கிட்டு அமளியில் ஈடுபட்டனர். பின்னர் தங்களுக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் ஒட்டுமொத்த தமிழகமும் இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்து போராடி வருகின்றன.
இந்நிலையில் ராஜ்யசபாவில் இன்று ஜீரோ அவரில் பேசிய தி.மு.க. எம்.பி கனிமொழி, மீத்தேன் திட்டத்தால் காவிரி டெல்டா பகுதியே பாலைவனமாகிவிடும் நிலை இருப்பதாக கவலை தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட அண்ணா தி.மு.க. எம்.பி.க்கள், மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி கொடுத்ததே தி.மு.க. அரசுதான் என்று குற்றம்சாட்டி குரல் எழுப்பினர். அப்போது சபாநாயகர் இருக்கையில் இருந்த துணைத் தலைவர் பி.ஜே. குரியன், அண்ணா தி.மு.க. எம்பிக்களை சமாதானப்படுத்தினார்.
ஆனாலும் அவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பவே, கனிமொழியின் பேச்சில் அண்ணா தி.மு.க. வை விமர்சிக்கவில்லை என்கிற போது ஏன் இந்த எதிர்ப்பு என்று கடிந்து கொண்டார்.
தொடர்ந்தும் அண்ணா தி.மு.க. எம்.பிக்கள் கூச்சலிட்டதால் சபையில் சிறிது நேரம் அமளி நீடித்தது. பின்னர் சபையின் மையப்பகுதிக்கு வந்த அண்ணா தி.மு.க. எம்.பிக்கள் தாங்கள் பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரி முழக்கமிட்டனர். ஆனாலும் துணைத் தலைவர் குரியன் அவர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து அண்ணா தி.மு.க. எம்.பிக்கள் ராஜ்யசபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications