பெங்களூரில் பைக், கார்களை வழிமறித்து காற்றை பிடுங்கி விட்ட கன்னட அமைப்பினர்!
பெங்களூரு: பந்த் தினத்தில் சொந்த வாகனங்களில் சாலைகளில் சென்றோரையும் வழி மறித்து, டயரின் காற்றை பிடுங்கி விட்டுள்ளனர் கன்னட அமைப்பினர்.
மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு தலையிட கூடாது என்று வலியுறுத்தி 500 கன்னட அமைப்புகள் இணைந்து இன்று நடத்தி வரும் பந்த் போராட்டத்திற்கு தென் கர்நாடகாவில் ஆதரவு கிடைத்துள்ளது.
அரசு பஸ்கள், பயணிகளுக்கான ஆட்டோ, டாக்சிகள் இயங்கவில்லை. ஆனால், சாலையை வெறிச்சோடியதாக காட்ட வேண்டும் என்ற ஆதங்கத்தில், தனியார் வாகனங்களையும் மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் கன்னட அமைப்பினர்.

குறிப்பாக பெங்களூரின், கேஆர் புரம் பகுதிகளில், பைக், கார் போன்ற சொந்த வாகனங்களில் சென்றோரையும் வழிமறித்து, டயரில் காற்றை பிடுங்கி விட்டனர் கர்நாடக ரக்ஷனா வேதிகே என்ற கன்னட அமைப்பினர்.
இதனால் நடு தெருவில், வாகன ஓட்டிகள் பரிதாபமாக நின்றனர்.
இதனிடையே, பெங்களூருவிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலுள்ள துமகூரு நகரில், ஆசிரியர்களை மிரட்டியுள்ளனர் கன்னட அமைப்பினர். துமகூரு நகரிலுள்ள ஒரு தனியார் பள்ளியில், எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள் திருத்தும் பணியில் 200 ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்தனர். அந்த பள்ளிக்குள் புகுந்த கன்னட அமைப்பினர், ஆசிரியர்களை வெளியேறுமாறு மிரட்டினர்.
உங்களுக்கெல்லாம், குடிக்கவே தண்ணீர் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது, இதில் விடைத்தாள் திருத்துவது ஏன் என்று ஆசிரியர்களிடம் கன்னட அமைப்பினர் தகராறு செய்தனர். இதனால், ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தும் மையத்தில் இருந்து வெளியேறினர். மையத்திற்கு, கன்னட அமைப்பினர் பூட்டு போட்டனர்.












Click it and Unblock the Notifications