எங்களுக்கே தண்ணீர் இல்லை... தமிழகத்திற்கு எப்படி கொடுக்க முடியும்? கர்நாடக முதல்வர் சித்தராமையா
பெங்களூரு : கர்நாடகாவில், 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடய இயலாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி கர்நாடகா தண்ணீர் தருவதில்லை. ஜுன் 12-ல் தண்ணீர் திறந்து விடாததற்கு கர்நாடக அரசு முறையாக தண்ணீர் வழங்காததே காரணம்.

கர்நாடகா அரசு 94 டி.எம்.சி. பதிலாக 64 டி.எம்.சி. நீர் தான் திறந்துவிட்டுள்ளது. 27.557 டி.எம்.சி. தண்ணீரை திறக்க கர்நாடகா அரசுக்கு உத்தரவிடவேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழுவை அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், மைசூருவில், கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூறியதாவது...
கர்நாடகாவில், 40 ஆண்டுகளாக இல்லாத அளவில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது, அணைகளில், பாதியளவு தண்ணீர் கூட இல்லை. இங்குள்ள விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கும், குடிநீருக்கும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்துக்கு எப்படி தண்ணீர் விட முடியும். தண்ணீர் இருந்த போதெல்லாம், தமிழகத்துக்கு விட்டுள்ளோம். கடந்த, ஜூனில் கூட, தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது நிலைமை மோசமாக உள்ளது.
இரு மாநிலமும் அமர்ந்து பேசி, எதார்த்த நிலையை புரிந்து கொண்டு, அதன்படி செயல்பட வேண்டும். மழை பெய்த பின்னர், நிலைமை சீரடையும் வாய்ப்புள்ளது. இவ்வாறு, கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறினார்.












Click it and Unblock the Notifications