காணாமல் போன காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங் எங்கே இருக்கிறார்? விலகாத மர்மம்!
இன்று கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருக்கும் நிலையில் காணாமல் போன காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங் எங்கே இருக்கிறார் என்ற மர்மம் நிலவி வருகிறது.
பெங்களூர்: இன்று கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருக்கும் நிலையில் காணாமல் போன காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங் எங்கே இருக்கிறார் என்ற மர்மம் நிலவி வருகிறது.
இன்று மாலை 4 மணிக்கு பாஜகவின் எடியூரப்பா அரசு கர்நாடக சட்டசபையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேணடும். தற்போது சட்டசபையின் பலம் 222. ஆனால் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற குமாரசாமியின் ஒரு தொகுதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதனால் தற்போதைய பலம் 221 மட்டுமே.

இதனால் தற்போது பெரும்பான்மையை நிரூபிக்க 111 உறுப்பினர்கள் தேவை. பாஜக கட்சிக்கு 104 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது. இன்னும் 7 பேரின் ஆதரவு அந்த கட்சிக்கு தேவை. காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணிக்கு மொத்தம் 117 எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது.
இவ்வளவு பரபரப்பான சூழ்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங் எங்கே இருக்கிறார் என்ற மர்மம் நிலவி வருகிறது. ஹோசபெட் தொகுதியில் வெற்றிபெற்ற இவர், பாஜக கட்சியினரால் கடத்தப்பட்டுவிட்டார் என்று காங்கிரஸ் - மஜத குற்றச்சாட்டு வைத்து இருந்தது. பாஜகவை சேர்ந்த ஜனார்த்தன ரெட்டி இவரை கடத்தி வைத்து இருக்கிறார் என்று கூறப்பட்டது.
அதேபோல் ஆனந்த் சிங்கின் சில உறவினர்கள், வழக்கறிஞர்கள் எல்லோரும் ரெட்டி சகோதரர்களுக்கும் நெருக்கமானவர்கள். இதனால் ஆனந்த் சிங் அவராகவே விருப்பப்பட்டு காங்கிரஸ் - மஜத எம்எல்ஏக்களுடன் தங்காமல் வெளியே சென்று இருக்கலாம் என்று கூறப்பட்டது. முதல் நாள் பெரும்பான்மை இல்லாமல் காங்கிரஸ் - மஜத எம்எல்ஏக்கள் ஈகிள்டன் ஹோட்டலுக்கு கூட்டிச்செல்லப்பட்ட போதே, இவர் காணாமல் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் வெளிநாட்டில் இருக்கிறார், இவரை சட்டசபைக்கு வாக்கெடுப்பின் போது, வரவிடாமல் செய்து, அவையின் பலத்தை குறைத்து வெற்றிபெறுவதே பாஜகவின் நோக்கம் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த ஸ்கிரீன்ப்ளேவில் பெரிய டிவிஸ்ட் நிகழ்ந்து இருக்கிறது. ஆனந்த் சிங் தற்போது காங்கிரஸ்- மஜத எம்எல்ஏக்கள் பெங்களூரில் தங்க வைக்கப்பட்டு இருக்கும் ஹோட்டலுக்கு வந்து சென்றுள்ளார்.
அவர் அந்த ஹோட்டலுக்கு வந்து சென்றதை காங்கிரஸ் தொண்டர்கள் பார்த்துள்ளனர். இவர் நேற்று காங்கிரஸ் கட்சியின் கர்நாடக அமைச்சர் சிவக்குமாரை தொடர்பு கொண்டு காங்கிரஸ் கட்சிக்குத்தான் வாக்களிப்பேன் என்று ஆதரவு அளித்துள்ளார். இந்த நிலையில் அவரை இன்று ஹோட்டலில் பார்த்ததாக தொண்டர்கள் கூறியுள்ளனர்.
ஆனாலும் இப்போதும் ஆனந்த் சிங் எங்கே இருக்கிறார், அவர் ஏன் தலைமறைவாகவே இருக்கிறார், இல்லையென்றால் ஏன் தலைமறைவாக வைக்கப்பட்டுள்ளார், யார் அவரை தலைமறைவாக வைத்து இருப்பது, இன்று அவர் சட்டசபைக்கு வாக்களிக்க வருவாரா என்று நிறைய கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் உள்ளது. எல்லா கேள்விகளுக்கும் இன்று காலை 11 மணிக்கு பதவிப்பிரமானத்தின் போது பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .












Click it and Unblock the Notifications