மாட்டிறைச்சி: கர்நாடகா முதல்வர் சித்தராமையா தலையை வெட்டுவேன் என மிரட்டிய பா.ஜ.க. பிரமுகர் கைது!!
பெங்களூர்: மாட்டிறைச்சி சாப்பிட்டால் கர்நாடகா முதல்வர் சித்தராமையா தலையை வெட்டுவேன் என்று மிரட்டிய பாரதிய ஜனதா பிரமுகர் சென்னபசப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.
மாட்டிறைச்சி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, எனக்கு மாட்டிறைச்சி பிடித்தால் சாப்பிடுவேன். அதை யாரும் தடுக்க முடியாது. ஒருவரின் உணவு உரிமை குறித்து கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்று கூறியிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து விஸ்வ ஹிந்து பரிஷத், ஸ்ரீராம் சேனா, சிவசேனா, பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளும் பாரதிய ஜனதா கட்சியினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஷிமோகாவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட பகுதியில் பேசிய அம்மாவட்ட பாஜக செயலாளரும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் நெருங்கிய ஆதரவாளருமான சென்னபசப்பா, இந்துக்கள் தெய்வமாக வணங்கும் மாட்டின் இறைச்சியை சாப்பிடுவேன் என சித்தராமையா பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதை யாராலும் தடுக்க முடியாது என்று பேசியுள்ளார். முடிந்தால் அவர் ஷிமோகாவுக்கு வந்து மாட்டிறைச்சி சாப்பிடட்டும். அவ்வாறு சாப்பிட்டால் சித்தராமையாவின் தலையை வெட்டுவேன் என்றார்.
அவரது இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சென்ன பசப்பா மீது ஷிவமோகா மாவட்ட காங்கிரஸ் செயலாளர் பிரசன்னகுமார் போலீஸில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து சென்னபசப்பா மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.