பரபரப்பான நிலையில் கர்நாடக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராகும் கே.ஜி. போப்பையா!
கர்நாடக மாநில சட்டசபையில் நாளை பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையில், கர்நாடக சட்டசபையின் இடைக்கால சபாநாயகராக பாஜக கட்சியை சேர்ந்த கே.ஜி. போப்பையா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
பெங்களூர்: கர்நாடக மாநில சட்டசபையில் நாளை பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையில், கர்நாடக சட்டசபையின் இடைக்கால சபாநாயகராக பாஜக கட்சியை சேர்ந்த கே.ஜி. போப்பையா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நாளை பாஜகவின் எடியூரப்பா அரசு கர்நாடக சட்டசபையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேணடும். தற்போது சட்டசபையின் பலம் 222. ஆனால் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற குமாரசாமியின் ஒரு தொகுதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதனால் தற்போதைய பலம் 221 மட்டுமே.
இதனால் தற்போது பெரும்பான்மையை நிரூபிக்க 111 உறுப்பினர்கள் தேவை. பாஜக கட்சிக்கு 104 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது. இன்னும் 7 பேரின் ஆதரவு அந்த கட்சிக்கு தேவை. காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணிக்கு மொத்தம் 117 எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது சபாநாயகரின் பங்கு இதில் முக்கியத்துவம் பெறுகிறது. நாளை எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்துவிட்டு பின் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும். இதற்கு சபாநாயகர் தேவை. இதனால் தற்போது பாஜகவை சேர்ந்த கே.ஜி. போப்பையா தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா இவரது தேர்விற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.
முதலில் கர்நாடக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆர்.வி.தேஷ்பாண்டே தேர்ந்தெடுக்கப்பட இருந்தார். தற்போது சட்டசபையில் இவர்தான் மிகவும் அனுபவமிக்க நபர் என்பதால் பாஜக அரசு இவர் பெயரை பரிந்துரை செய்துள்ளது. ஆனால் ஆளுநர் இரண்டாவது பரிந்துரையான போப்பையா பெயரை ஏற்றுக்கொண்டார்.
போப்பையா இதற்கு முன்பே 2009 முதல் 2013 வரை கர்நாடக சட்டசபையின் சபாநாயராக இருந்துள்ளார். அப்போதே 2010ல் எடியூரப்பாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 11 பாஜக எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சர்ச்சைக்கு உள்ளானார். இந்த நிலையில் தற்போது இவரது நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் நிலையான அரசு பெறுப்பேற்று சபாநாயருக்கு தனியாக வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளித்து புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட வேண்டும். அதுவரை இவர்தான் தற்காலிக சபாநாயகராக செயல்படுவார். ஆனால் இவருக்கு சபாநாயகருக்கு இருக்கும் எல்லா அதிகாரமும் இருக்காது பாதிதான் இருக்கும், எம்எல்ஏக்கள் பதவி ஏற்க மட்டுமே இவர் பொதுவாக பயன்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.
ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு 24 மணி நேரமே இருப்பதால் இவருக்கு முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. வாக்கெடுப்பின் போது சபாநாயகர் என்ன நடவடிக்கை எடுக்க தகுதி இருக்கிறதோ அதே தகுதி இவருக்கும் இருக்கும்.இதனால் நாளை நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பை இவரே கண்காணிப்பார்.