சொந்த செலவுக்கு மக்களின் பணம் ரூ.3.5 கோடி... கர்நாடக ஆளுநர் மீது சர்ச்சை...
பெங்களூரு : பொதுமக்களின் பணம் சுமார் மூன்றரை கோடி ரூபாயை சொந்த செலவுக்கு பயன்படுத்தியதாக கர்நாடக ஆளுநர் மீது புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த தகவலை கர்நாடக டி.வி. சேனல் ஒன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுள்ளது.

கர்நாடக மாநில ஆளுநராக வாஜுபாய் வாலாவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு நியமித்தது. 77 வயதான அவர், இதற்கு முன் குஜராத் மாநிலத்தில் அமைச்சராக பதவி வகித்தவர்.
இந்நிலையில், வாஜுபாய் வாலா கர்நாடக மாநில ஆளுநர் பதவியேற்றது முதல் தனது ஆளுநர் மாளிகையை புதுப்பிப்பதற்காக ரூ.2.4 கோடி செலவு செய்துள்ளார். இதில் தனது அலுவலகத்தில் அலங்கார வேலைகளுக்காக செலவு செய்த 40 லட்ச ரூபாயும், மற்றொரு அலுலகத்தின் அலங்கார வேலைகளுக்காக செலவு செய்த 30 லட்ச ரூபாயும் அடங்கும்.
மேலும் ஆளுநர் மாளிகைக்குள்ளேயே தனியாக பாதை அமைக்க 35 லட்ச ரூபாயும், பிரதான கட்டடத்தில் உள்ள பாதை அகலப்படுத்த 50 லட்ச ரூபாயும், செலவு செய்துள்ளார்.
சமையலறை, உணவருந்தும் அறை, கழிவறை ஆகியவற்றை புதுப்பிக்க 50 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளார் கர்நாடக ஆளுநர்.
இது தவிர தனியாக விமானத்தை அமர்த்தி பயணம் செய்தது என 9 மாதங்களில் ரூ.3.5 கோடியை மக்கள் பணத்தில் இருந்து செலவு செய்துள்ளதாக தகவல் பெற்ற தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் ஹைலைட் என்னவென்றால் ஆளுநருக்கு தனது சொந்த வசதிக்காக செலவு செய்ய உரிமை உள்ளது என்று முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கூறியது தான்...












Click it and Unblock the Notifications