ஜெ. விடுதலையை எதிர்க்கும் அப்பீல் மனுவில் திருத்தங்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது கர்நாடகா
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்க்கும் மேல்முறையீட்டு மனுவில் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய திருத்தங்களை கர்நாடகா இன்று தாக்கல் செய்தது.
1991-96ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டிருந்தனர். 18 ஆண்டுகாலம் நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பில், ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் எஞ்சிய 3 பேருக்கு தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ. பதவியும் முதல்வர் பதவியும் பறிபோனது.
இத்தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்டோர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி கடந்த மே 11-ந் தேதியன்று ஜெயலலிதா உட்பட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
ஆனால் ஜெயலலிதா உட்பட 4 பேரின் விடுதலையை எதிர்த்து கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவில் 10 குறைபாடுகள் இருப்பதாக உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இதனை ஏற்று மேல்முறையீட்டு மனுவில் உரிய திருத்தங்களை கர்நாடகா தரப்பில் வழக்கறிஞர் அரிஸ்டாட்டில் உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.