ஜெயலலிதா ஜாமீன் மனு நாளை விசாரணை: விடுதலை வேண்டி தீ மிதித்த அதிமுகவினர்
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் தாக்கல் செய்துள்ள ஜாமின் மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
இந்த நிலையில் ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைக்க வேண்டும் என்று அதிமுகவினர் பலரும் அங்கப்பிரதட்சணம், தீ மிதித்தல் என பல பிரார்த்தனைகளை செய்து இறைவனை வேண்டி வருகின்றனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகாலம் தண்டனை பெற்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, செப்டம்பர் 27ஆம் தேதி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், ஜெயலலிதா உள்பட 4 பேர் ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நாளை நண்பகல் 12 மணிக்கு நீதிபதி சந்திரசேகர் முன்பு விசாரணைக்கு வருகிறது.
அதனுடன் கீழ் நீதிமன்றத்தின் தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களும் விசாரிக்கப்பட உள்ளன.
ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியும், அரசுத் தரப்பில் வழக்கறிஞர் பவானி சிங்கும் ஆஜராகி வாதாடுகின்றனர்.
சிறையில் 10 நாட்கள்
இன்றுடன் கடந்த 10 நாட்களாக சிறையில் உள்ளார் ஜெயலலிதா. நாள்தோறும் அவரைப் பார்ப்பதற்காக ஏராளமானோர் வந்த வண்ணம் இருக்கின்றனர்.
மயங்கிய பெண் தொண்டர்
பெங்களூரு சிறை அருகே கும்மிடிப்பூண்டியில் இருந்து வந்த பெண் ஒருவர் சோகத்தில் மயங்கினார். சிறை வளாகத்தில் அ.தி.மு.க.,வினர் இன்றும் மொட்டை போட்டு கொண்டனர்.
அதிமுகவினர் வேண்டுதல்
அவருடைய ஜாமீன் மனு நாளை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. அவருக்கு ஜாமீன் கிடைக்கவேண்டி கோவில்களில் பல்வேறு பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர் அதிமுகவினர்.
அங்கப்பிரதட்சணம்
சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் கோயிலில் நூற்றுக்கணக்கானோர் மொட்டை அடித்துக்கொண்டு அங்கபிரதட்சணம் செய்தனர்.
எம்.எல்.ஏ.க்கள் தீ மிதிப்பு
காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளையார் பாளையத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் காஞ்சிபுரம் எம்.எல்.ஏ சோமசுந்தரம், உத்தரமேரூர் எம்.எல்.ஏ வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் தீ மிதித்தனர்.
கங்கு இல்லையே கரிதானேப்பா
இதனிடையே எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் தீ மிதித்துவிட்டு சென்ற பின்னர் சிலர் தீ மிதிப்பதற்காக கொட்டப்பட்டிருந்த தீ கங்குகளை லேசாக கையால் கிளறி பார்த்துவிட்டு, அவை சூடே இல்லாமல் இருப்பதாக கூறினர். இந்த தீ மிதிக்காக காலையிலேயே தீ கங்குகள் கொட்டப்பட்டதால், அவை ஆறியிருக்கும் என கட்சிக்காரர்கள் அதற்கு விளக்கம் அளித்தனர்.












Click it and Unblock the Notifications