ஜெ.வை விடுதலை செய்த குமாரசாமியின் தீர்ப்பை உடைக்க கர்நாடகா அரசு மும்முர வியூகம்!!
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான அப்பீல் மனு மீதான தினசரி விசாரணையின் போது கர்நாடகா உயர்நீதிமன்ற தனிநீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை உடைப்பதற்கான வலுவான வாதங்களை முன்வைப்பதில் மும்முரமாக உள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட அப்பீல் மனுக்கள் மீதான விசாரணை பிப்ரவரி 2-ந் தேதி முதல் உச்சநீதிமன்றத்தில் தினந்தோறும் நடைபெற உள்ளது. இந்த அப்பீல் மனுக்கள் மீதான இன்றைய விசாரணையின் போது அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 2-ந் தேதியன்று நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
அத்துடன் தினசரி நடைபெறும் விசாரணையின் போது அனைத்து தரப்புக்கும் தங்களது வாதத்தை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் உறுதி அளித்துள்ளது.
கடந்த முறை நீதிபதிகள் பி.எஸ். கோஷ், ஆர்.கே. அகர்வால் பெஞ்ச் முன்பு நடைபெற்ற விசாரணையின் போது ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ், அப்பீல் மனுக்கள் மீதான விசாரணையை விரைவாக நடத்த வலியுறுத்தினார். அப்போது, சில நடைமுறைகள் இன்னமும் முடிவடையாமல் இருப்பதால் இன்றைய தேதிக்கு (நவ.23) விசாரணையை ஒத்தி வைத்திருந்தனர்.
இந்த வழக்கு மிக முக்கியமான வழக்கு என்பதால் நாள்தோறும் விசாரணை நடத்தப்படுவது தேவையான ஒன்றாக இருக்கிறது. இவ்வழக்கில் கர்நாடகா அரசு வழக்கை நடத்திய மாநிலம் என்பதால் முதலில் வாதத்தை முன்வைக்கும். தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் தரப்பும் ஜெயலலிதா விடுதலையை எதிர்க்கும் வாதங்களை முன்வைக்கும்.
இதை தொடர்ந்து கர்நாடகா அரசுத் தரப்பின் வாதங்களுக்கு பதில் வாதத்தை ஜெயலலிதா தரப்பும் முன்வைக்கும். இந்த நடைமுறைகள் அனைத்தும் சுமார் 3 மாதகாலம் நீடிக்கும் என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.
கர்நாடகா தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, கர்நாடகா அரசின் சிறப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா ஆகியோர் ஆஜராக உள்ளனர். கடந்த முறை விசாரணையின் போது, ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடகா அரசு முதல் முறையாக அப்பீல் செய்த போதே அதை கர்நாடகா உயர்நீதிமன்றம் நிராகரித்தது; இது எப்படியெல்லாம் ஜெயலலிதா விடுதலைக்கு வழிவகுத்தது என்பதை நிரூபிக்க உள்ளதாக கூறியிருந்தார்.
மேலும் அன்பழகன் தரப்பில், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் இருந்து 6 நிறுவனங்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும் தொடரப்பட்ட மனுவையும் உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.