அடடே கர்நாடகா! தமிழ்நாட்டுக்கு 4,500 கன அடிநீர் திறப்பு- மண்டியாவில் இடைவிடாத 41-ம் நாள் போராட்டம்!
மண்டியா: காவிரியின் குறுக்கே கட்டி வைத்துள்ள அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 4,500 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிடுகிறது. தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீரை கூட திறக்க கூடாது என மண்டியாவில் 41-வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டுக்கு பாய்ந்தோடி வரும் காவிரி நதியை கர்நாடகா 100 ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ணராஜ சாகர் அணை மூலம் தடுத்தது. இதனால் தமிழ்நாட்டுக்கு இயல்பாக கிடைக்க வேண்டிய காவிரி நீரை போராடிப் பெற வேண்டியுள்ளது. கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்துதான் தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்கப்படுகிறது.

காவிரி நீர் திறப்பு: கர்நாடகாவின் மண்டியா மாவட்டம் கிருஷ்ணராஜ சாகர் அணையில் 100 அடிக்கு மேல் நீர் இருப்பு உள்ளது. ஆனால் இவ்வளவு நேரையும் குடிநீருக்குதான் பயன்படுத்த வேண்டும் என்கின்றன கன்னட விவசாய, இனவாத அமைப்புகள். கபினி அணையிலும் நீர்மட்டம் குறையாமல் தொடர்ந்து நீடித்த அளவில் இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் தொடர் போராட்டங்களால் தற்போது காவிரியில் வினாடிக்கு 3,000 கன அடி நீரை திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதனடிப்படையில் கடந்த இரு நாட்களாக தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 4,500 கன அடிநீரை கர்நாடகா திறந்துவிட்டு வருகிறது. கடந்த பல நாட்களாக தமிழ்நாட்டுக்கு மிக மிக சொற்ப நீரை திறந்துவிட்டது கர்நாடகா.
மண்டியாவில் தொடர் போராட்டம்: இதனிடையே தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்கவே கூடாது என வலியுறுத்தி கன்னட விவசாயிகள், இனவாத அமைப்புகள் கர்நாடகாவில் 41-வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க கூடாது, காவிரி ஒழுங்காற்று குழு- காவிரி மேலாண்மை ஆணையம் ஆகியவற்றை கலைக்க வேண்டும் என்பது கன்னட விவசாயிகளின் கோரிக்கை. தங்களது கோரிக்கைக்கு ஆதரவாக ஒட்டுமொத்த கன்னடர்களும் போராட வேண்டும் என்றும் மண்டியா விவசாயிகள் அழைப்பு விடுக்கின்றனர்.
மண்டியாவில் பதற்றம்: காவிரி பிரச்சனையில் மண்டியா, பெங்களூர் பந்த் போராட்டங்கள் முழு அளவில் நடத்தப்பட்டன. ஆனால் கர்நாடகா தழுவிய பந்த் போராட்டம் முழு அளவில் வெற்றி பெறவில்லை. இதனால் மண்டியா மாவட்டத்தில் நாள்தோறும் பல்வேறு அமைப்புகளின் பெயரில் கன்னட விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications