காவிரிக்காக.. ராகு காலம் முடியும்வரை காத்திருந்து, சட்டசபையை ஆரம்பித்த கர்நாடக அரசு!
பெங்களூர்: ராகு காலம் முடியும் வரை காத்திருந்து நல்ல நேரத்தில் கர்நாடக சட்டசபை கூட்டத்தை தொடங்கியுள்ளது கர்நாடக அரசு.
காவிரி நதியிலிருந்து கூடுதல் நீரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 20ம் தேதி தீர்ப்பளித்தது.

இதனால் கர்நாடக விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்ற கர்நாடக சட்டப்பேரவையின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தை இன்று கூட்டியது கர்நாடக அரசு.
காலை 11 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கும் என்று சட்டசபை செயலாளர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் சட்டசபை கூட்டம் தொடங்குவது தாமதமாகிக்கொண்டு சென்றது.
சபாநாயகர் கோலிவாட், மேலவை தலைவர் சங்கரமூர்த்தி ஆகியோருடன் சபாநாயகர் அறையில் வைத்து, முதல்வர் சித்தராமையா, மூத்த அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தியபியே இருந்தனர்.
இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேட்டபோது, 12 மணிக்கு பிறகே சட்டசபை கூடும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் அதிகாரப்பூர்வமற்று தகவலை வெளியிட்டன.
வெள்ளிக்கிழமைகளில் காலை 10.30 மணி முதல் 12 மணிவரை ராகு காலம் நிலவும் என்பதால், சட்டசபை 12 மணிக்கு மேல் கூட உள்ளதாக அந்த தகவல்கள் தெரிவித்தன. இதற்காகவே சட்டசபை கூட்டம் தள்ளிப்போனது. இதன்பிறகு 12.30 மணிக்கு சட்டசபை தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கர்நாடக அரசியல்வாதிகளில் பலரும் நல்ல நேரம், ராகு காலம் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர். தேவகவுடாவின் மகனான ரேவண்ணா, ராகு காலத்தில் விவாதங்களில் கூட பேசுவதை தவிர்த்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூட நம்பிக்கைக்கு எதிராக சட்டம் கொண்டுவர முயன்ற சித்தராமையாவுக்கு அடுத்தடுத்து பல பிரச்சினைகள் ஏற்பட்டன. தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அரசியல் ரீதியாகவும் அவர் சங்கடங்களை சந்தித்து வருகிறார். இதையடுத்து கையில் எலுமிச்சை பழத்தை வைத்துக்கொண்டு நடமாடி வருகிறார் சித்தராமையா. இப்போது, காவிரி போன்ற முக்கியமான விஷயத்தில், தீர்மானத்தை தாக்கல் செய்ய வேண்டியிருந்ததால் நல்ல நேரத்தில் சட்டசபை கூட்டத்தை தொடக்க சித்தராமையாவும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications