ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு.. அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜர்
டெல்லி: கடந்த 2009ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்த போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தனது அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தி, ஐஎன்எக்ஸ் மீடியா என்கிற நிறுவனம் அந்நிய முதலீடு பெற அனுமதி வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த விவகாரத்தில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் கூறப்படும் நிலையில், இந்த வழக்கு சார்பாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் இயக்குநர்களான பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை செய்து வருகிறது.
இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கண்காணிக்கப்படும் நபராக உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. இந்நிலையில், ஜனவரி 11ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதனையடுத்து, தான் தொழில் நிமித்தமாக வெளிநாடுகளுக்கு பயணம் செல்ல வேண்டி இருப்பதால் இந்த வழக்கில் இருந்து நேரில் ஆஜராக தனக்கு விலக்கு அளித்தும், ஜனவரி 10-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை வெளிநாடு செல்லவும் அனுமதி அளிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல் செய்து உள்ளார்.
இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் வரும் 16-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத் துறை சம்மன அனுப்பியியது. இதையடுத்து கார்த்தி சிதம்பரம் டெல்லியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.