காஷ்மீர் தாக்குதல் நடத்திய 4 பேர் இவர்கள் தான்.. 26 அப்பாவிகளை கொன்ற பயங்கரவாதிகளின் போட்டோ இதோ
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் நேற்று 4 பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பின் துணை அமைப்பான தி ரெசிஸ்டென்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்ற நிலையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் 4 பேரின் போட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் சுற்றுலா தலத்துக்குள் நேற்று நுழைந்த 4 பயங்கரவாதிகள் திடீரென்று துப்பாக்கியால் சுட்டு சுற்றுலா பயணிகளை கொன்றனர். இந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் மொத்தம் 26 பேர் பலியாகினர்.

தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 12 பேர் வரை காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் நம் நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ்
சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா (LeT) இன் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) அமைப்புதான் பொறுப்பு ஏற்றுள்ளது. இந்த தாக்குதலில் தொடர்புடைய 4 பயங்கரவாதிகளின் போட்டோக்கள் தற்போது வெளியாகி உள்ளன.
இந்த போட்டோக்களை விசாரணை அமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த 4 பயங்கரவாதிகளில் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவர்களில் ஒருவரின் பெயர் ஆசிப் பூஜி, மற்றொரு நபரின் பெயர் சுலைமான் ஷா, இன்னொரு நபரின் பெயர் அபு தல்ஹா என்பது தெரியவந்துள்ளது. இன்னொருவரின் பெயர், விபரங்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இவர்கள் 4 பேரும் லஷ்கள் இ தொய்பா அமைப்பின் துணை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் அமைப்புடன் நெருக்கமாக செயல்பட்டு வந்ததும் உறுதியாகி உள்ளது. அதுமட்டுமின்றி இவர்கள் பஹல்காம் சுற்றுலா தலத்துக்கு எப்படி வந்தனர்? என்பது பற்றிய முக்கிய விபரத்தையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். தற்போது வரை யாரும் கைதோ அல்லது சுட்டு கொலையோ செய்யப்படவில்லை. 4 பேரையும் ராணுவ வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
முன்னதாக இந்த பயங்கரவாதிகளின் ஸ்கெட்ச் வரைபடம் வெளியிடப்பட்டது. அதற்கு முன்பாக ஒரேயொரு பயங்கரவாதி சம்பவ இடத்தில் பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது எடுத்த போட்டோ வெளியிடப்பட்டது. இப்போது 4 பயங்கரவாதிகளின் தெளிவான போட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் விரைவில் அவர்களை ராணுவம் நெருங்கி கைது செய்யும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications