தொடரும் காஷ்மீர் துயரம்... ராணுவம் சுட்டதில் இளைஞர் பலி... இறப்பு எண்ணிக்கை 69 ஆனது
ஸ்ரீநகர்: ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னர், வடக்கு காஷ்மீர் பகுதியில் ராணுவம் சுட்டதில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இதனையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.
காஷ்மீரில் கடந்த 9ம் தேதி புர்கன் வானி கொல்லப்பட்டதையடுத்து அங்கு அமைதியின்மை நிலவி வருகிறது. அங்கு போராட்டக்காரர்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே நடைபெறும் சண்டையில் இதுவரை 69 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அமைதியை ஏற்படுத்த காஷ்மீர் எதிர்க்கட்சித் தலைவரான ஓமர் அப்துல்லா டெல்லி வந்து ஜனாதிபதி பிராணப் முகர்ஜி மற்றும் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாள் பயணமாக காஷ்மீர் சென்று பல்வேறு தரப்பினரோடு ஆலோசனை நடத்திவிட்டு வந்தார்.
இதனையடுத்து காஷ்மீரில் பல்வேறு பகுதிகளில் படிப்படியாக ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டு அமைதி திரும்பிக் கொண்டிருந்தது.
இந்நிலையில், காஷ்மீரின் வடக்கு பகுதியில் உள்ள லடூரா என்ற கிராமத்திற்கு ராணுவத்தினரும் போலீசாரும் சோதனைக்காக சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள இளைஞர்கள் ராணுவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் சுட்டத்தில் தனிஷ் மன்சூர் என்ற இளைஞர் பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து காஷ்மீரில் பலி எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.
காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பிறகு நடந்த முதல் பலி தனிஷ் மன்சூர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications