கட்சி கணக்கை தணிக்கை செய்ய சந்தோஷ் ஹெக்டேவை அனுமதியுங்கள்: அன்னாவுக்கு கெஜ்ரிவால் கடிதம்!
அன்னா ஹசாரேவுக்கும் அவரது சீடரான அர்விந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் வலுத்து வருகிறது. அன்னா ஹசாரேவின் லோக்பால் மசோதாவுக்கான இயக்கத்தின் நிதியை முறைகேடாக பயன்படுத்துவதாகவும் தமது பெயரை தேர்தலுக்கு பயன்படுத்துவதாகவும் கெஜ்ரிவால் மீது அன்னா ஹசாரே புகார் தெரிவித்து கடிதம் அனுப்பியிருந்தார்.
இதற்கு கெஜ்ரிவால் தரப்பும் பதிலளித்து வந்தது. இந்நிலையில் அன்னா ஹசாரேவுக்கு விரிவான கடிதம் ஒன்றை கெஜ்ரிவால் அனுப்பி வைத்திருக்கிறார். அதில் தமது கட்சியின் கணக்குகளை சரிபார்க்க சந்தோஷ் ஹெக்டே அல்லது நீங்கள் நியமிக்கும் யார் வேண்டுமானாலும் வந்து சரிபார்த்துக் கொள்ளட்டும். நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அப்படி எங்களது கணக்குகள் முறையாக இருக்குமேயானால் டெல்லி சட்டசபை தேர்தலில் எங்களுக்கு ஆதரவாக நீங்கள் பிரசாரம் செய்வீர்கள் என்று நம்புகிறோம் என்றும் அந்த நீண்ட கடிதத்தில் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.