முதலில் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்: ஆம் ஆத்மிக்கு உமா பாரதி அட்வைஸ்
உஜ்ஜயினி: ஊழலை வேரறுப்பதற்கு போராடுவதற்கு முன்னதாக மக்களிடம் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் பாஜக துணைத்தலைவர் உமா பாரதி.
நேற்று முன்தினம் டெல்லியில் சரியாக செயல்படாத போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யவேண்டும் என கோரி, அம்மாநில முதல்வர் கெஜ்ரிவாலும் அவரது அமைச்சர்களும் 10 நாள் தர்ணாவைத் தொடக்கினர். டெல்லியின் முக்கியப்பகுதியில் சுமார் 30 மணிநேரம் வரை நடைபெற்ற இந்த தர்ணாவால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் அப்பகுதி மெட்ரோ ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டு மக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
இதனையடுத்த டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் கேட்டுக்கொண்டதன் பேரில், தனது இரண்டு நாள் போராட்டத்தை கெஜ்ரிவால் முடித்துக்கொண்டார்.
இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநிலம், உஜ்ஜயினியில் செய்தியாளர்களை சந்தித்த, பாரதிய ஜனதாவின் துணைத்தலைவர் உமா பாரதி, " தர்ணா நடத்துவதற்கு முன்பு, முதல்வர் கெஜ்ரிவால் டெல்லி போலீஸ் துறையை கையில் வைத்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேயை சந்தித்து இருக்க வேண்டும். அப்போது அவரிடம் போலீசார் மீது எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை குறித்தும் பேசியிருக்கவேண்டும்.
ஊழலை வேர் அறுப்போம் என்று கூறிவரும் ஆம் ஆத்மி கட்சியினர், முதலில் மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும்' என்று அவர் கூறினார்.