மீண்டும் ஜாமீன் தொகை கட்ட மறுப்பு: கேஜ்ரிவாலை மேலும் 14 நாள் சிறையிலடைக்க கோர்ட் உத்தரவு!
டெல்லி: நிதின் கட்காரி தொடர்ந்த அவதூறு வழக்கில் மீண்டும் ஜாமீன் தொகை கட்ட மறுத்ததால் ஆம் ஆத்மி கட்சித் தாலிவர் அரவிந்த் கேஜ்ரிவாலை மேலும் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிதின் கட்காரி ஊழல்வாதி என்று சில மாதங்களுக்கு முன்பு அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து கேஜ்ரிவால் மீது நிதின் கட்காரி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணையின் போது ரூ10 ஆயிரத்துக்கான பத்திரங்களைத் தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக் கொள்ள டெல்லி நீதிமன்றம் 2 நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அரசியல் வழக்குக்கு எல்லாம் ஜாமீன் தொகை கட்ட முடியாது என்பது எங்கள் கொள்கை என்றார்.
இதனால் கேஜ்ரிவாலை 2 நாள் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் முடிவிலும் ரூ10 ஆயிரம் ஜாமீனுக்குரிய பிணைத் தொகையை கட்ட முடியாது என்று கேஜ்ரிவால் பிடிவாதமாக இருந்தார்.
இதையடுத்து அரவிந்த் கேஜ்ரிவாலை மேலும் 14 நாட்கள் அதாவது ஜூன் 6-ந் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பின்னர் கேஜ்ரிவால் மீண்டும் டெல்லி திகார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.