முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த அனுமதிக்க முடியாது - கேரளா அடாவடி
திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என கேரள அடாவடியாக தெரிவித்துள்ளது.
முல்லை பெரியாறு அணையில் 142 அடி உயரம் வரை நீர்தேக்கி வைக்கலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்கப்பட்டு வருகிறது.
ஆனால் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாககூறி கேரளா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அதில் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு கேரளா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து நேற்று திருவனந்தபுரத்தில் கேரள மாநில நீர் வளத்துறை அமைச்சர் டி.தாமஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், முல்லை பெரியாறு அணையின் நீரமட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
தமிழக முதல்வர் அப்படி கோரிக்கை விடுத்திருந்தால், அதற்கு நாங்கள் நிச்சயம் எதிர்ப்பு தெரிவிப்போம். ஒருபோதும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அனுமதிக்க மாட்டோம் என்றார்.
மேலும், கேரளா, தமிழகத்திற்கு இடையே ஓடும் அச்சன்கோவில், பம்பா மற்றும் வைப்பாறு நதிகளை இணைக்கவும் கேரள அரசு சார்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.