கேரள முதல்வர் மீது கல்வீச்சு - நெற்றி, மார்பில் காயம் - இருவர் கைது

கேரளாவில், சூரிய மின்தகடு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் கூரை (சோலார் பேனல் ) அமைத்து தருவதாக நடந்த ஊழலில், கேரள முதல்வர் உம்மன்சாண்டிக்கும் பங்குள்ளது எனக் குற்றஞ்சாட்டி வரும் இடதுசாரிக் கட்சியினர், அவர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
சமீபகாலமாக உம்மன்சாண்டி செல்லும் இடங்களில் எல்லாம் அந்த கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள போலீஸ் மைதானத்தில் 43-வது வருடாந்திர மாநில போலீஸ் தடகள வீரர்கள் கூட்ட நிறைவு விழா நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக கேரள முதல்வர் உம்மன்சாண்டி நேற்று காரில் சென்றுக் கொண்டிருந்த போது, இடதுசாரி கட்சியினர் அவரது கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில், காரின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து, உம்மன்சாண்டி மீது விழுந்ததில், அவரது நெற்றியில் லேசான காயம் ஏற்பட்டது. காயமேற்பட்ட போதும், அவர் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
முதல்கட்ட சிகிச்சைகளை கண்ணூரில் மேற்கொண்ட உம்மன்சாண்டி, அதனைத் தொடர்ந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் அழைத்துச் செல்லப் பட்டார். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள உம்மன்சாண்டியை பரிசோதித்த மருத்துவர்கள் நெற்றிக் காயத்தால் ஆபத்தில்லை, ஆனால், நெஞ்சுப் பகுதியில் காயம் சற்று ஆழமாக உள்ளதாக தெரிவித்து சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, போலீசார் இருவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications