கேரள கோவில் தீவிபத்து- விபத்தில் சிக்கியவர்கள் பற்றிய விபரத்திற்கு உதவி எண்கள் அறிவிப்பு
திருவனந்தபுரம்: கேரள கோவில் தீவிபத்தில் சிக்கியவர்கள் பற்றிய விபரங்களைத் தெரிந்து கொள்ள உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பராவூர் புன்டிங்கல் தேவி கோவில் திருவிழாவில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. வானவேடிக்கையால் இந்த விபத்து நடந்துள்ளது. இதில், கோவில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கியும், தீவிபத்தில் காயமடைந்தும் திருவிழாவிற்கு வந்திருந்த 90 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காயமடைந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் திருவனந்தபுரம், கொல்லம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை மோசமாக இருப்பதால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், இந்த விபத்தில் சிக்கியவர்கள் பற்றிய விபரங்களைப் பெற 0474 - 2512324, 949760778, 949730869 என்ற உதவி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.