கேரளாவில் முத்தப் போராட்டத்திற்கு தடை இல்லை
திருவனந்தபுரம்: முத்த போராட்டத்திற்கு தடை விதிக்கப்படாது என கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.
கேரளாவில், கலாச்சாரக் காவலர்களுக்கு எதிராக அன்பின் முத்தம் என்ற பெயரில் முத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பாஜகவின் இளைஞர் அமைப்பான ‘பாரதீய ஜனதா யுவமோர்ச்சா' அமைப்பின் நன்னெறி கொள்கையை கண்டித்து கடந்த மாதம் 2-ந் தேதி கொச்சியில் முதல் முத்த போராட்டம் நடந்தது.

ஐ.டி. ஊழியரும், குறும்பட இயக்குனருமான ராகுல் பசுபாலன், ‘பேஸ்புக்' மூலம் அழைப்பு விடுத்த இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இப்போராட்டம், சென்னை உள்பட நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடத்தப்பட்டது. இதற்கு மாநில அரசு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று கோழிக்கோடு பேருந்து நிலையம் அருகே முத்தப் போராட்டம் நடத்த முயன்றவர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முத்த போராட்டத்தில் பங்கேற்க வந்த 9 பெண்கள் உள்பட 48 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் போட்டி போராட்டத்தில் இறங்கிய அனுமன் சேனை அமைப்பை சேர்ந்த 30 பேரையும் போலீசார் பிடித்து சென்றனர். எனினும் கைது செய்யப்பட்ட அனைவரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக அம்மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலாவிடம் இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதிலாவது :-
"ஜனநாயக நாட்டில் யாரும் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்ய மற்றும் போராட்டத்தில் ஈடுபட உரிமை உள்ளது. எப்போது இது சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக வரும்போது மட்டும் அரசு தலையிடும்" என்றார்.
மேலும், ‘மாநில அரசு யாராலும் ஏற்பாடு செய்யப்பட்ட எந்தவிதமான போராட்டத்திற்கும், எதிர்ப்பு தெரிவிக்காது. இருப்பினும், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 285 கீழ், பொது இடங்களில் ஆபாச நடவடிக்கையில் ஈடுபடுவது குற்றமாகும்' என ரமேஷ் குறிப்பிட்டார்.
முத்த போராட்டம் நடத்துபவர்களுடன் சுமுகமான அணுகுமுறையை அரசு எடுத்துள்ளது எனக் கூறிய ரமேஷ், இந்த போராட்டத்தை தடை செய்ய அரசிடம் எந்த திட்டமும் இல்லை. அவர்கள் போராடட்டும்' எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications