ஆபரேஷன் தியேட்டரில் ஓணம் விருந்து வைத்த திருவனந்தபுரம் ஜி.எச்.
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், அங்குள்ள ஆபரேஷன் தியேட்டரில் ஓணத்தையொட்டி ஓண விருந்து பரிமாறப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஓண விருந்து வைத்து நேற்று மாலை கொண்டாடப்பட்டது. விழாவில் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதை ஓட்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆபரேசன் தியேட்டரில் உள்ள பொருட்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்ட்டன.
ஆபரேசன் தியேட்டரின் முதல் அறையில் அத்தப்பூ கோலம் போட்டப்பட்டது. அடுத்த அறையில் அனைவருக்கும் ஓண விருந்து பறிமாறப்பட்டது. இந்த விருந்தில் டாக்டர்கள், ஊழியர்கள் என 500 பேர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி நடந்த ஆபரேசன் தியேட்டர் முக்கியமான ஆபரேசன்கள் நடக்கும் இடம் என்பதால் வெளியில் இருந்து யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் இப்படிப்பட்ட முக்கியததுவம் வாய்ந்த ஆபரேசன் தியேட்டரில் ஓண நிகழ்ச்சி நடத்தி உணவு பறிமாறியது சர்ச்சைய ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சுகாதார துறை அமைச்சர் சிவகுமாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவம் தொடர்பாக உடனடியாக உரிய விசாரணை நடத்த அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.