நடிகை கடத்தல் வழக்கு: 85 நாள்கள் சிறை வாசத்துக்கு பிறகு ஜாமீன் பெற்றார் நடிகர் திலீப்
நடிகையை கடத்தில் பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப்புக்கு இன்று ஜாமீன் கிடைத்தது.
Recommended Video
திருவனந்தபுரம்: பிரபல நடிகையை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப்புக்கு கேரள உயர்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.
படப்பிடிப்பில் கலந்துகொண்டு காரில் திரும்பிக் கொண்டிருந்த கேரள நடிகை, காரில் கடத்திச் செல்லப்பட்டு 2 மணி நேரம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பல்சர் சுனில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் திலீப் கடந்த ஜூலை 10-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
கேரள உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி கடந்த மாதம் 24-ஆம் தேதி திலீப் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக திலீப்பின் ஜாமீன் மனு கேரள உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது தந்தைக்கு நினைவு தின சடங்குகள் செய்யவுள்ளதால் கடந்த மாதம் 6-ஆம் தேதி 2 மணி நேரம் பரோலில் வெளியே வந்தார் திலீப்.
இந்த சடங்குகள் முடிவடைந்து மீண்டும் ஆலுவா சிறைக்கு சென்றார். இந்நிலையில் கேரள உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு கோரினார். அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதுபோல் 4 முறை அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இன்று அவரது ஜாமீன் மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள், 85 நாள்களாகியும் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். திலீப் வெளியே வந்தால் அவர் சாட்சியங்களை கலைக்க வாய்ப்புள்ளது என்பதால் ஜாமீன் வழங்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.