பாபநாசம் தலையணையில் மூழ்கி கேரள வாலிபர் பலி- உடல் மீட்பு
விகேபுரம்: பாபநாசம் தலையணையில் நண்பர்களை காப்பாற்ற சென்றவர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள மன்னாராவை சேர்ந்தவர் ஹரி. இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ஹரி அவருடன் வேலை பார்க்கும் நண்பர்கள் 9 பேர் நெல்லை மாவட்டம் பாபநாசத்திற்கு சுற்றுலா வந்தனர்.
அங்கு அனைவரும் தலையணையில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது ஹரியின் நண்பர்களான அனிஷ் திடீரென தண்ணீரில் மூழ்கினார். அவரை காப்பாற்ற ஹரியும் ஆழமான பகுதிக்கு சென்றார்.
இதை பார்த்த மற்ற நண்பர்கள் அனீஷை உயிருடன் மீட்டனர். ஆனால் அவரை காப்பாற்ற சென்ற ஹரி மாயமானார். நீண்ட நேரம் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து உடனடியாக அம்பை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் ஹரியின் உடலை மீட்டனர்.
இதுகுறித்து விகேபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகன் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications