சபரிமலை கூட்ட நெரிசலுக்கு தமிழக பக்தர்களே காரணம் - கேரளா அமைச்சர் அபாண்ட குற்றச்சாட்டு
சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் கூட்ட நெரிசலுக்கு தமிழக பக்தர்களே காரணம் என்று கேரளா அமைச்சர் அபாண்டமாக குற்றம் சாட்டியுள்ளார்.
திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல பூஜை நிறைவடைய உள்ளதால் கூட்டம் அலைமோதுகிறது. ஒரே நாளில் 5 லட்சம் பக்தர்கள் குவிந்ததால் நிலைமையை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர். நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 25 பேர் காயமடைந்தனர். இவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜையையொட்டி கடந்த மாதம் 15ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இன்று நடைபெறும் மண்டல பூஜையின்போது, ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி கடந்த 22ம்தேதி ஆரன்முளாவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது.
நேற்று மதியம் தங்க அங்கி பம்பை வந்து சேர்ந்தது. பம்பை கணபதி கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின் தலைச்சுமையாக தங்க அங்கி வைக்கப்பட்டுள்ள பெட்டி மேளதாளம் முழங்க சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
மண்டலபூஜையையொட்டி கூட்டம் அதிகமாக இருப்பதால், பக்தர்களை ஒழுங்குபடுத்தி அனுப்புவதற்காக தடுப்பு கயிறு கட்டப்பட்டு உள்ளது. பக்தர்கள் முண்டியடித்துக்கொண்டு சென்றதால், சன்னிதானத்துக்கும் மாளிகைபுரத்துக்கும் இடையே கட்டப்பட்டு இருந்த தடுப்பு கயிறு நேற்று திடீரென்று அறுந்தது.
இதனால் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். பயங்கர நெரிசல் ஏற்பட்டது. அந்த இடமே ஒரே களேபரமானது. இதில் 25 பக்தர்கள் காயமடைந்தனர்.
இதில் சந்திதானத்தில் உள்ள மருத்துமனையில் 18 பேரும் பம்பையில் உள்ள மருத்துவமனையில் சிலரும் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கவலைக்கிடமான நிலையில் கோட்டையம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக நிலைமையை சீர் செய்தனர்.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் உடனடியாக சபரிமலைக்கு டோலியில் பயணித்தார். அவர், எந்த பக்தர்களுக்கும் எதுவும் ஆகவில்லை என்று கூறினார். கூட்ட நெரிசலுக்கும் விபத்துக்கும் காரணம் தமிழக பக்தர்கள்தான் என்று குற்றம் சாட்டினார்.
மண்டல பூஜையை முன்னிட்டு பம்பை முதல் சன்னிதானம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கமாண்டோ வீரர்கள், விரைவு அதிரடி படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் இருந்து ஆண்டு தோறும் சபரிமலையில் உள்ள ஐயப்பனை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். முல்லைப் பெரியாறு பிரச்சினை ஏற்பட்ட போது ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும் கேரளா செல்லும் தமிழக பக்தர்களின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. இந்த நிலையில் கூட்ட நெரிசலுக்கு காரணமே தமிழக பக்தர்கள்தான் என்று கேரளா அமைச்சர் அபாண்டமாக குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications