புது சர்ச்சை.. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு குடியரசு தின விழா அணிவகுப்பில் அனுமதி மறுப்பு?
டெல்லி: பாரதிய ஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு குடியரசு தினவிழா அணிவகுப்பு அலங்கார ஊர்திகள் இடம்பெற அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
டெல்லியில் இன்று 66வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் அமெரிக்கா அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

குடியரசு தின விழாவையொட்டி மாநிலங்களின் கலாசாரத்தைப் வெளிப்படுத்தும் அலங்கார ஊர்திகள் இடம்பெறுவது வழக்கம். இந்த அலங்கார ஊர்திகளுக்கு பரிசும் வழங்கப்படும். தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு கடந்த ஆண்டு 2வது பரிசு கிடைத்திருந்தது.
ஆனால் இம்முறை தமிழகம் உட்பட 13 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இந்த அணிவகுப்பில் இடம்பெறவில்லை. அதேபோல் எந்த ஒரு யூனியன் பிரதேசமும் இந்த அலங்கார அணிவகுப்பில் பங்கேற்கவில்லை.
இந்த 13 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக தமிழகம், கேரளா, ஒடிஷா, மேற்கு வங்கம், பீகார் என பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லாத பெரும்பான்மை மாநிலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
மேலும் பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் பாரதிய ஜனதா கூட்டணி அரசு நடைபெறும் பஞ்சாப் மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும்கூட இந்த அணிவகுப்பில் இடம்பெறவில்லை. வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், டெல்லி, ஹிமாச்சலபிரதேச மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் இன்றைய அணிவகுப்பில் இடம்பெறவில்லை.
மொத்தம் 16 மாநிலங்கள், மத்திய அமைச்சகங்களைச் சேர்ந்த மொத்தம் 25 அலங்கார ஊர்திகளே அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தன.












Click it and Unblock the Notifications