முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய படை- மத்திய அரசு பரிசீலிக்க உத்தரவு!கேரளா மனு தள்ளுபடி!
டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய படையை நிறுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அணையில் 142 அடியாக உயர்த்தும் தீர்ப்புக்கு விளக்கம் கோரிய கேரளாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று முல்லை பெரியார் அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டது. ஆனால் அப்படி உயர்த்த முடியாது என கேரளா அவசர சட்டம் நிறைவேற்றியது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ள தமிழகத்துக்கு கடந்த ஆண்டு மே மாதம் அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து இந்த தீர்ப்புக்கு விளக்கம் கோரி உச்சநீதிமன்றத்தில் கேரளா கடந்த ஜூனில் மனு ஒன்றைத் தாக்கல் செய்ததது.
மேலும் அணை அமைந்துள்ள பகுதி கேரளாவில் இருப்பதால் தமிழக அதிகாரிகள் தாக்கப்படுகின்றனர்; இதனால் அணையில் மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசும் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தது.
இந்த இரு மனுக்களும் தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்ட போதே அனைத்து விளக்கங்களும் கொடுக்கப்பட்டுவிட்டது எனக் கூறி கேரளாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மத்திய பாதுகாப்பு படை
மேலும் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்புடையை ஈடுபடுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது தொடர்பாக கேரளா அரசும், மத்திய அரசும் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications