முல்லைப்பெரியாறு அணை பகுதியில் மூழ்கும் கட்டடங்கள்: கேரளாவின் ஆக்கிரமிப்பு அம்பலம்
தேக்கடி: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் 142 அடியை எட்ட உள்ள நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும், கேரளத்தைச் சேர்ந்த தனியார் தங்குமிடங்களும், அரசு நட்சத்திர விடுதிகளும் தண்ணீரில் மூழ்கத் துவங்கியுள்ளதால் ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணை கட்டத்தொடங்கியபோது, போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதி 8 ஆயிரம் ஏக்கர், அலுவலகம், பொறியாளர் குடியிருப்பு, தமிழக அரசுப் பள்ளி ஆகியவை அமைந்துள்ள நிலம் உள்ளிட்ட மொத்தம் 8,137 ஏக்கர் நிலத்துக்கு, ஏக்கர் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் வீதம், 999 ஆண்டுகளுக்கு குத்தகை ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர், 1970 ஆம் ஆண்டில் இருந்து ஏக்கருக்கு 30 ரூபாயாக குத்தகை தொகை உயர்த்தப்பட்டது.
கடந்த 1886ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு ஒப்பந்தம் ஏற்பட்டதில் இருந்து, 8 ஆயிரத்து 591 ஏக்கர் நிலப்பரப்புக்கு ஆண்டு தோறும் தமிழக அரசு, கேரளாவிற்கு குத்தகை செலுத்தி வருகிறது.

அணையில் 132 அடிக்கு நீர்மட்டம் இருந்தபோது, 3 ஆயிரத்து 914 ஏக்கர் பரப்பளவு இடம் நீரில் மூழ்கி இருந்தது. மீதமுள்ள பகுதி காலியாகவே இருந்தது.
ஆக்கிரமிப்பு கட்டிடங்கள்
இந்த நிலையில், அதாவது கடந்த 35 ஆண்டுகளில், தமிழகம் குத்தகைக்கு எடுத்த பகுதிகளை ஆக்கிரமித்து கேரள அரசின் அனுமதியுடன் சட்டவிரோதமாக கட்டடங்கள் கட்டப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில், அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால், அந்த கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பாதாலேயே அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவது அம்பலமாகியுள்ளது.
கேரளாவின் பொய் பிரசாரம்
முல்லைப் பெரியாறு அணையின் மதகுகளில் ஒன்று பழுதாகி விட்டதாகவும், அதன் காரணமாக அணையில் நீர்தேக்கினால் தங்கள் மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக கேரள அரசு கூறி வருகிறது.
ஆனால், முல்லைப் பெரியாறு அணையில் உள்ள நீர், அதனை விட ஏழு மடங்கு பெரிதான இடுக்கி அணைக்கு தான் செல்லும் என்றும், இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறைக்கப்பட்ட நீர்மட்டம்
கடந்த 1979-ஆம் ஆண்டில், கேரள அரசு முல்லைப் பெரியாறு அணை பிரச்னையை உருவாக்கியதையடுத்து, நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், அணையை பலப்படுத்தும் பணிகளை தமிழக அரசு தொடங்க வேண்டும். அதுவரை அணையின் நீர்மட்டத்தை 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைத்துக் கொள்ளலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.
குத்தகை பணம்
இதனால், கடந்த 35 ஆண்டுகளாக அணையில் நீர் தேங்கும் பகுதியில், சுமார் 3 ஆயிரத்து 914 ஏக்கர் பரப்பளவு மட்டுமே தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. இருந்தாலும் ஆண்டுதோறும் 8,137 ஏக்கருக்கான குத்தகை பணம் ரூ. 2 லட்சத்து 57 ஆயிரத்து 787-ஐ தமிழக அரசு, கேரள அரசுக்கு முறையாக செலுத்தி வருகிறது.
கேரளாவின் தங்கும் விடுதிகள்
இந்த 35 ஆண்டுகளில், தேக்கடி பகுதி உலக சுற்றுலாத் தலமாக மாறியதால், கேரள வனத்துறை, சுற்றுலாத்துறை, தனியார் நிறுவனங்கள் தண்ணீர் தேங்காத நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து நட்சத்திர ஹோட்டல்கள், விடுதிகள் கட்டியுள்ளதாக, தமிழக பொதுப்பணித்துறை தெரிவித்து வந்தது.
தண்ணீர் தேக்க தடை
அதோடு, தமிழகத்தின் குத்தகைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கேரள அரசு அகற்ற வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். தங்குமிடங்களின் உரிமையாளர்கள் கேரளாவில் அரசியல் பின்னணி உள்ளவர்கள் என்பதால்தான், தொடர்ந்து அணையில் நீரைத்தேக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக, தமிழக விவசாயிகளும் குற்றம் சாட்டி வந்தனர்.
மூழ்கி வரும் விடுதிகள்
இந்நிலையில், நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து அணையின் நீர்மட்டம் 136 அடியைத் தாண்டியது. இதில், குமுளியிலிருந்து தேக்கடி செல்லும் சாலையின் பெரும் பகுதியில் நீர்ப்பிடிப்பு பகுதியில், தண்ணீர் தேங்கத் தொடங்கியது. அத்தோடு அதனைச் சுற்றியுள்ள நட்சத்திர தங்குமிடங்களிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. கேரள வனத்துறை அலுவலகங்களைச் சுற்றியும் தண்ணீர் தேங்கத் தொடங்கி உள்ளது.
கார் நிறுத்துமிடம்
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நீர்ப்பிடிப்பு பகுதியில் பிரம்மாண்ட கார் நிறுத்துமிடம் அமைக்க கேரள அரசு எடுத்து வந்த நடவடிக்கைக்கு, தமிழக அரசு பசுமை தீர்ப்பாயத்தில் தடை வாங்கியுள்ளது.
152 அடி தேக்கினால்
141 அடி தண்ணீர் தேங்கும்போதே, பல தங்குமிடங்கள் தண்ணீரில் சூழ்ந்துள்ள நிலையில், 152 அடி தண்ணீர் தேக்கும்போது நூற்றுக்கணக்கான விடுதிகளும், தங்குமிடங்களும், சுற்றுலா மையங்களும் தண்ணீரில் மூழ்கும் நிலையில் உள்ளது. எனவே, நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் தங்குமிடங்கள், விடுதிகள், கேரள அரசு அலுவலகங்களையும் அகற்ற, தமிழக அரசு நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications