கேரள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு கலாம் பெயர்: உம்மன்சாண்டி அறிவிப்பு
திருவனந்தபுரம்: கேரள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பெயர் சூட்டப்படும் என அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி அறிவித்துள்ளார்.
இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக பதவி வகித்தவர் அப்துல்கலாம். ஏவுகணை நாயகன், பேராசிரியர், எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகத் திறமைகளுடன் விளங்கிய கலாம், இந்தியர்கள் மனதில் மக்கள் ஜனாதிபதியாக இடம் பிடித்தவர். இவர் கடந்த 27ம் தேதி மாரடைப்பால் காலமானார்.

2020ல் இந்தியாவை வல்லரசாக்க கனவு காணச் சொல்லி ஊக்கப் படுத்திய கலாமின் திடீர் மரணத்தால் இந்தியர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்நிலையில், கேரள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு கலாமின் பெயர் சூட்டப் படும் என கேரள முதல்வர் உம்மன்சாண்டி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை நேற்று கூடிய கேரள சட்டசபையில் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-
கேரளாவில் 20 ஆண்டு பணி...
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை முன்னேற்றத்துக்கு முக்கிய பங்காற்றி உள்ளார். ஒரு விஞ்ஞானியாக கேரள மாநிலத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கலாம் பணிபுரிந்து இருக்கிறார்.
கவுரவப் படுத்தும் வகையில்...
எனவே அவரை கவுரவப்படுத்தும் வகையில் கேரள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என பெயரிட முடிவு செய்துள்ளோம்.
கலாமின் இறுதிச் சடங்கு...
ராமேஸ்வரத்தில் இன்று நடைபெற உள்ள அப்துல் கலாமின் இறுதிச்சடங்கில் பங்கேற்க கேரளாவில் இருந்து ஒரு குழு செல்கிறது. இந்த குழுவில் நான் (உம்மன் சாண்டி), கவர்னர் பி.சதாசிவம், எதிர்க்கட்சி தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன், அமைச்சர் பி.ஜே.ஜோசப் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
சபாநாயகரின் விருப்பம்...
சபாநாயகர் என்.சக்தானும் ராமேசுவரம் வர விருப்பம் தெரிவித்தார். ஆனால் சட்டசபை நடந்து வருவதால் அவரால் எங்களுடன் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு நிராகரிப்பு...
பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அப்துல் கலாமின் உடலை கேரளாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால் சில தொழில்நுட்பம் காரணமாக மத்திய அரசு எங்கள் கோரிக்கையை நிராகரித்து விட்டது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications