பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: கேரளாவில் பந்த் - லாரி, ஆட்டோக்கள் நிறுத்தம்
பெட்ரோல், டீசல் உயர்த்தப்பட்டதால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
Recommended Video

திருவனந்தபுரம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் இன்று 12 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. காலை 6 மணிமுதல் எந்த வாகனமும் இயக்கப்படவில்லை.
கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பெட்ரோல் லிட்டர் ரூ.75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 64 ரூபாயை தொட்டு விட்டது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.

இதனை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு மோட்டார் வாகன தொழிலாளர் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் சி.ஐ.டி.யு , ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என். டி.யு.சி உள்பட பெரும்பாலான தொழிற்சங்கங்கள் கலந்து கொள்கின்றன. இன்று மாலை 6 மணி வரை கேரளாவில் தனியார் பேருந்துகள், லாரிகள், ஆட்டோக்கள், டாக்சிகள் உள்ளிட்ட எந்த வாகனமும் இயக்கப்படவில்லை.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று போராட்டம் நடத்தினர். இரு சக்கர வாகனங்களை ஊர்வலமாக தள்ளி சென்றும் அவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் லாரிகள், வாகனங்கள், எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு பிறகே இந்த வாகனங்கள் கேரளாவுக்குள் செல்ல அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications