ஆசாராம் மகன் மீதான பாலியல் வழக்கின் முக்கிய சாட்சி துப்பாக்கியால் சுடப்பட்டார்!
பானிப்பட்: சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் மீதான பாலியல் தாக்குதல் புகாரில் முக்கிய சாட்சியை துப்பாக்கியால் சுட்டு விட்டனர். அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் கடந்த 2013ம் ஆண்டு சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டார். அவர் தற்போது ஜெய்ப்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவரது மகன் நாராயண் சாயும் பாலியல் பலாத்கார வழக்கி் சிக்கினார். நாராயண் சாய் தன்னை 2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக பலமுறை பலாத்காரம் செய்து சீரழித்தார் என்று சூரத்தைச் சேர்ந்த ஒரு பெண் சூரத்தில் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் போலீஸ் கையில் சிக்காமல் தப்பி வந்தார் சாய்.
இந்த நிலையில் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி சாய் கைது செய்யப்பட்டார். அவரைக் கைது செய்ய பஞ்சாப், குஜராத், டெல்லி, ஹரியானா ஆகிய மாநில போலீஸார் இணைந்து செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
சாய் மீது பாலியல் பலாத்காரம், இயற்கைக்குப் புறம்பான செக்ஸ் வைத்துக் கொள்வது, சட்டவிரோதமாக அடைத்து வைப்பது, சட்டவிரோதமாக கூடுவது, கலவரம் ஏற்படுத்துவது, குற்றச் செயலில் ஈடுபடுவது என பல வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில் இந்த வழக்கில் முக்கிய சாட்சியான மகேந்திர செளலா என்பவர் சில அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டுள்ளார். ஹரியானா மாநிலம் பானிப்பட் நகரில் புதன்கிழமை காலை இந்த சம்பவம் நடந்தது. இதில் செளலா பலத்த காயமடைந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆசாராம் மற்றும் சாய் வழக்கில் சாட்சிகள் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த பிப்ரவரி மாதம் ஆசாராமுக்கு எதிரான வழக்கில் ஒரு சாட்சி கத்தியால் குத்தப்பட்டார். ஜோத்பூர் கோர்ட் வளாகத்தில் வைத்து அவர் குத்தப்ட்டார். அதேபோல இந்த வழக்கில் முக்கிய சாட்சிகள் 2 பேர் ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டனர் என்பது நினைவிருக்கலாம். அகில் குப்தா என்ற சமையல்காரர் மற்றும் அம்ருத் பிரஜாபதி ஆகிய இருவரும் துப்பாக்கியால் தனித் தனி சம்பவங்களில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications