டெல்லி: வேலைக்காக அழைத்து வரப்பட்டு விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 3 ஆப்பிரிக்க பெண்கள்
டெல்லி: டெல்லியில் வேலைக்காக வந்து விபச்சாரத்தில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்ட 3 ஆப்பிரிக்க பெண்கள் தங்கள் பரிதாப நிலையை செய்தி தொலைக்காட்சி ஒன்றிடம் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 15ம் தேதி டெல்லியில் அம்மாநில சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி நள்ளிரவில் ஒரு பகுதியில் திடீர் சோதனை நடத்தி அங்கு குடியிருக்கும் ஆப்பிரிக்க நாடான உகாண்டாவைச் சேர்ந்த 3 பெண்கள் மீது போதை வஸ்து பயன்படுத்துதல் மற்றும் விபச்சாரம் செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
இதையடுத்து அந்த 3 பெண்களும் போலீசில் புகார் கொடுத்தனர். தங்கள் வீட்டுக்கு நள்ளிரவில் வந்த கும்பலுக்கு சோம்நாத் தான் தலைமை தாங்கி வந்தார் என்று அடையாளம் காண்பித்தனர். இந்நிலையில் அந்த பெண்கள் முன்னணி செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் விவரம் வருமாறு,

வேலைக்காக
டெல்லியில் வேலை இருக்கு என்று கூறி என்னை இங்கு அழைத்து வந்தனர். டிக்கெட்டுக்காக நான் ஆப்பிரிக்காவில் ஒரு பெண்ணிடம் பணம் கொடுத்தேன். அந்த பெண் டிக்கெட் எடுத்து என்னை டெல்லிக்கு அனுப்பி வைத்தார். இங்கு வந்தால் நிலைமை சரியில்லை அதனால் சிறிது காலம் கழித்து நீ வேலையை துவங்கலாம் என்று கூறினர். கடைசியில் பணத்துக்காக விபச்சாரம் செய்யுமாறு கூறினார். ஆனால் நான் மறுத்துவிட்டேன் என்றார் ஒரு ஆப்பிரிக்க பெண்.

தூதரகம்
எங்கள் நாட்டு தூதரகத்தை தொடர்பு கொண்டால் அவர்கள் உதவ மாட்டார்கள் என்று கூறப்பட்டதால் அவர்களை தொடர்பு கொள்ளவில்லை. போலீசிடம் போவதால் நன்மை இல்லை என்று கூறியதால் நான் புகார் கொடுக்கவில்லை. ஆனால் என் நாட்டுக்கு திரும்பிச் செல்ல உதவினால் நான் தூரகத்தை நாட தயார் என்றார் அந்த பெண்.

விபச்சாரம்
பெண்களை டெல்லியில் விபச்சாரத்தில் தள்ளிவிடுவதை நான் என் கண்ணால் பார்த்துள்ளேன். நான் விபச்சாரத்தில் ஈடுபட மறுத்தபோது அவர்கள் என்னை அடித்து நொறுக்கினார்கள். டெல்லியில் விபச்சாரம் செய்யவில்லை என்றால் உன்னால் சாப்பிட முடியாது என்றார்கள். அதற்கு நான் செத்துப் போகிறேன் ஆனால் விபச்சாரத்தில் ஈடுபட மாட்டேன் என்றேன் என மற்றொரு ஆப்பிரிக்க பெண் தெரிவித்தார்.

உதவவில்லை
நான் டெல்லியில் உள்ள எங்கள் நாட்டு தூதரகத்தை தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் தூதரகத்தால் உதவ முடியாது என்றார்கள். ஏனெனில் கருப்பின மக்கள் இங்கு என்ன செய்கிறார்கள் என்று போலீசாருக்கு நன்றாக தெரியும் அதனால் யாராலும் உங்களுக்கு உதவ முடியாது என்று தெரிவித்தனர் என்றார் பாதிக்கப்பட்ட பெண்.

புகார்
வேலை வாங்கித் தருவதாக டெல்லிக்கு அழைத்து வந்து தங்களை விபச்சாரத்தில் ஈடுபட கட்டாயப்படுத்தியவர்கள் மீது அந்த 3 பெண்களும் போலீசில் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications