கார்த்திக் சிதம்பரம்தான் காங்கிரஸை நம்பி இருக்கிறார்... குஷ்பு சுளீர் பதில்!
டெல்லி: கார்த்தி சிதம்பரம்தான் காங்கிரஸ் தயவை நம்பி இருக்கிறார். யாருடைய துணையுமின்றி காங்கிரஸ் கட்சி வலுவுடன் இருக்கிறது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
நடிகைகளை நம்பி காங்கிரஸ் கட்சி இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டெல்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை செவ்வாய்க்கிழமை சந்தித்த பிறகு தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு குஷ்பு அளித்த பேட்டியில், "காங்கிரஸ் கட்சி யாரையும் நம்பி இல்லை.கார்த்தி சிதம்பரம்தான் காங்கிரஸ் தயவை நம்பி இருக்கிறார். யாருடைய துணையுமின்றி காங்கிரஸ் கட்சி வலுவுடன் விளங்கும்' என்றார்.
மேலும்,காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் அருமையாக இருப்பதாகவும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அது வெளிப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், "அரசியல் வரலாறு தெரியாமல் சிறுபிள்ளைத்தனமாக கார்த்தி பேசுவதை நான் பொருள்படுத்துவதில்லை' என்றார்.