கிட்னி கடத்தல் விவகாரம்.... விசாரணை வளையத்தில் டெல்லி அப்பல்லோ டாக்டர்கள்
டெல்லி: கிட்னி கடத்தல் விவகாரத்தில் டெல்லி இந்திரப்பிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
கிட்னி கடத்தல் கும்பல் டெல்லி அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் நடமாடுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிடைத்த அடிப்படையில் போலீஸார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு 6 பேரை கைது செய்தனர்.
இவர்களில் டெல்லி இந்திரப்பிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனை ஊழியர் ஒருவரும் சிக்கினார். ஆனால் இந்த கிட்னி கடத்தல் கும்பலுக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அப்பல்லோ மருத்துவமனை கூறியிருந்தது. அத்துடன் போலீஸார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் உறுதி அளித்தது.
இருப்பினும் கடத்தல் கும்பலின் போலி ஆவணங்களுக்கு ஒப்புதல் கொடுத்ததாக 3 அப்பல்லோ மருத்துவர்களை விசாரணை வளையத்துக்குள் டெல்லி போலீஸ் கொண்டு வந்துள்ளது. அதேபோல் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய மேலும் 2 மூத்த மருத்துவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அத்துடன் இந்த கிட்னி கடத்தல் குறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த நிர்வாகிகள் பலருக்கும் போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஒட்டுமொத்த கிட்னி கடத்தல் கும்பலையும் கூண்டோடு கைது செய்ய 25 பேர் கொண்ட தனிப்படை ஒன்றையும் டெல்லி போலீசார் களத்தில் இறக்கியுள்ளனர்.