இந்தியா கேட் பகுதியில் தினமும் 3 குழந்தைகள் மாயம்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நாள் ஒன்றுக்கு மூன்று குழந்தைகள் காணாமல் போவதாக ஆய்வு ஓன்று அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள இந்தியா கேட் மற்றும் ராஜ்பத் புல்வெளி சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக உள்ளது. எனவே, இங்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்கள் அதிகளவில் தினந்தோறும் கூடுகின்றனர். விடுமுறை தினங்களில் மட்டும் இப்பகுதிக்கு சுமார் 10 ஆயிரம் பேர் வருகை தருவதாக கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் இப்பகுதியில் காணாமல் போன ஜான்வி என்ற 3 வயது எட்டு நாட்களுக்குப் பிறகு ஜனக்புரி என்ற பகுதியில் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்டார். இதையடுத்து இப்பகுதியில் காணாமல் போகும் குழந்தைகள் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
அதில், தினந்தோறும் அப்பகுதியில் மூன்று குழந்தைகள் காணாமல் போவது தெரியவந்துள்ளது. இதனால், அங்கு பாதுகாப்பை பலப்படுத்த டெல்லி போலீசாரை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக டெல்லி போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது :-
பாதுகாப்பு அதிகரிப்பு...
மூன்று வயது சிறுமி மாயமாகி பின்னர் மீட்கப்பட்ட சம்பவத்தையடுத்து, இந்தியா கேட் மற்றும் ராஜ்பத் பகுதியை குற்றம் நிகழாத பாதுகாப்பு மிக்க பகுதியாக மாற்ற முடிவு செய்துள்ளோம்.
தரம் குறைந்த கண்காணிப்பு கேமராக்கள்...
இப்பகுதியில் தற்போது 40 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இதில் பதிவாகும் வீடியோவின் தரம் குறைவாக இருப்பதால் குற்றவாளிகளை கண்டறிவதில் சிரமம் உள்ளது.
புதிய கேமராக்கள்...
இவற்றை மாற்றியமைத்து தரமான 300 கேமராக்கள் நிறுவ திட்ட மிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் சிறு பொருட்கள் விற்கும் வணிகர்களுக்கு அடையாள அட்டை தரப்பட உள்ளது.
அடையாள அட்டை...
அடையாள அட்டை இருப்பவர்கள் மட்டுமே இப்பகுதியில் பொருட்கள் விற்பனை செய்ய முடியும். அவர்களை நெருக்கமாக கண்காணிக்க போலீஸ் முடிவு செய்துள்ளது.
பாதுகாப்பான பகுதியாகும்...
சந்தேகத்துக்கு இடமான ஆட்கள் நடமாட்டம் இருந்தால், அவர்களைப் பற்றி போலீஸாருக்கு தகவல் தருபவர்களாகவும் வணிகர்கள் இருப்பார்கள். இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து இந்தியா கேட் பகுதி மிகவும் பாதுகாப்பான பகுதியாக மாற்றப்படும்' என இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.