மனித உயிர் முக்கியம்.. தெருநாய்களைக் கொல்லுங்கள்! - மோகன் லால்
தெரு நாய்களால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுவது அதிகரித்து வருவதால் அவற்றைக் கொல்வது அவசியம் என நடிகர் மோகன் லால் கூறியுள்ளார்.
கேரளாவில் தெரு நாய்கள் எக்கச்சக்கம். தமிழகத்தை விட மூன்று மடங்கு அதிக தெருநாய்கள் இருப்பது கேரளாவில்தான். இந்த நாய்களிடம் கடி வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிலர் உயரிழந்தும் உள்ளனர்.
குறிப்பாக சிறுவர் சிறுமியர்தான் இந்த தெரு நாய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த தெரு நாய்களை ஒழிக்குமாறு அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் அவர்களின் குரல்கள் அரசுக்கு எட்டவில்லை. எனவே அவர்களுக்காகக் குரல் கொடுத்துள்ளார் நடிகர் மோகன்லால்.
அவர் தனது ப்ளாகில் இப்படி எழுதியுள்ளார்:
கேரளாவில் தெரு நாய்கள் மக்களை பயமுறுத்தி வருகின்றன. பொதுமக்களை விரட்டி விரட்டி கடிக்கின்றன. எனக்கு நாய்களிடம் பிரியம் உண்டு. அதனால்தான் 4 நாய்களை வீட்டில் வளர்த்து வருகிறேன். அதே சமயம் தெரு நாய்களைக் கொல்ல வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை நியாயமானதுதானே.
நாய்களை கொல்ல வேண்டுமா? என்று ஜீவகாருண்யம் பேசுபவர்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். "தங்கம் காய்க்கும் மரம் என்றாலும் வீட்டுக்கு ஆபத்து என்றால் அதை வெட்ட வேண்டும்" என்பது பழமொழி. எனவே அதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். தெரு நாய்களை விட மனித உயிர்கள் முக்கியம்," என்று மோகன்லால் குறிப்பிட்டுள்ளார்.