காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் வீடியோவை வெளியிட்ட தீவிரவாதிகள்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோவை ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ளது.
ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் நோக்கி இன்று மதியம், ரிசர்வ் போலீஸ் படையின், மொத்தம் 70 பஸ்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தபோது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்தை, பஸ் மீது மோத வைத்து தற்கொலைப்படை தாக்குதல் அரங்கேற்றப்பட்டது.
இந்த பயங்கர தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் பலியான நிலையில், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக, ஒரு வீடியோவை அந்த அமைப்பு பேஸ்புக்கில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரை சேர்ந்த அடில் அகமது என்பவரை கொண்டு தாக்குதல் அரங்கேற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுதான், இவர் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பில் சேர்ந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனிடையே அடில் அகமது பேசிய வீடியோவையும் தீவிரவாத அமைப்பு வெளியிடடுள்ளது. அதில், நான் இந்த வீடியோ வரும் முன்பாக சொர்க்கத்தில் இருப்பேன் என அவன் கூறியுள்ளான்.