வறுமையில் இருந்து சாதனை, நோயாளிகள் விரும்பும் மருத்துவர்..உயிரிழந்த கொல்கத்தா மருத்துவரின் மறுபக்கம்
கொல்கத்தா: மேற்கு வங்கம் கொல்கத்தா மாநிலம் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவரை முன் பின் தெரியாதவர்களுக்கு கூட இந்த சம்பவம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படியிருக்கும்போது பெண் மருத்துவரின் பெற்றோர், உறவினர், நண்பர்களுக்கு இது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். இதோ பெண் மருத்துவர் குறித்து உறவுகள் பகிர்ந்துள்ள நினைவுகள்..
உயிரிழந்த பெண் மருத்துவரின் தந்தை கூறுகையில், "நாங்கள் பொருளாதார ரீதியான மிகவும் பின் தங்கியவர்கள். அவளுக்கு சிறிய வயதில் இருந்தே மாதுளைப் பழம் மிகவும் பிடிக்கும். அதை வாங்குவதற்கு கூட எங்களிடம் பணம் இருக்காது. நாளடைவில் எங்கள் பிசினஸ் நன்றாக சென்றதால் கொல்கத்தாவுக்கு குடிபெயர்ந்தோம். இங்கு சொந்தமாக வீடும் கட்டினோம். வீட்டுக்கு வெளியே உள்ள பெயர் பலகையில் அவளின் பெயரை மட்டுமே குறிப்பிட்டுள்ளோம்.

எங்களுக்கு அவள் மருத்துவர் ஆவார் என்று நம்பிக்கையில்லை. எங்கள் சிந்தனையை தவறாக்கி அவளின் சொந்த முயற்சியில் மருத்துவரானாள். அதில் நானும் என் மனைவியும் அவளால் மிகுந்த பெருமை அடைந்தோம். இப்போது எங்களின் ஒரே மகளை இழந்து தவிக்கிறோம். நாங்கள் கேட்பதெல்லாம் எங்களின் ஒரே மகள் எங்களுக்கு மீண்டும் வேண்டும்." என்று அழுதார்.
சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு பெண் மருத்துவர் தன் அம்மாவிடம் செல்போனில் பேசியிருக்கிறார். இதுகுறித்து அவரின் அம்மா, "நான் இரவு சிக்கன் சாப்பிட்டேன். அப்பாவை சரியான நேரத்தில் மருந்து சாப்பிட சொல்லுங்கள். நான் நன்றாக இருக்கிறேன். என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று சொன்னாள். ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் நாடே அவரைப்பற்றி கவலைப்பட வேண்டிய நிலை வந்துவிட்டது.
காலை நான் அவளை மீண்டும் தொடர்பு கொண்டபோது அவள் எடுக்கவில்லை. வேலையில் பிஸியாக இருப்பாள் என்று நினைத்தோம். இப்படியாகும் என்று நினைக்கவில்லை." என்று வேதனைப்பட்டார். "அவளுக்கு முதலில் மற்றொரு கல்லூரியில் அட்மிஷன் கிடைத்தது. வீட்டுக்கு அருகில் இருப்பதால் இந்த மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்தார். 2018 ஆம் ஆண்டு அவர் எம்பிபிஎஸ் பட்டம் வாங்கினார். தொடர்ந்து அங்கேயே முதுநிலை படிப்பையும் தொடர்ந்தார்." என்றனர் உறவினர்கள்.
அவரின் மருத்துவக்கல்லூரி நண்பர்கள், "எப்போதும் சுறுசுறுப்பாக பணியாற்றுவார். எல்லோரிடமும் நன்கு பேசுவார். எல்லோரிடமும் நல்ல நட்புடன் பழகினார். ஒருமுறை கூட யாரிடமும் விவாதம் செய்தது கிடையாது. ஆலோசனை வழங்குவதிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். இதனால் நோயாளிகள் அவரிடம் சிகிச்சை பெறதான் விருப்பம் தெரிவிப்பார்கள். பெரும்பாலும் நோயாளிகளின் உறவினர்களிடம் கூட பேசி ஆறுதல் அளிப்பார்.
அவர் ஒரு டைரி எழுதுவதையும் கடைப்பிடித்து வந்தார். அதில் தனது ஆசைகள், அனுபவங்கள், கனவு எல்லாவற்றையும் எழுதுவார். அவரின் கையெழுத்து மிகவும் அழகாக இருக்கும். அதனால் பலரும் ஒரு டாக்டருக்கான கையெழுத்து உன்னிடம் இல்லை என்று கிண்டல் செய்வோம். சமூகவலைதளங்களிலும் அவர் ஆக்டிவாக இருந்தார். இந்த சம்பவத்துக்குப் பிறகு அதை யாரும் தவறாக பயன்படுத்திக் கூடாது என்பதற்காக அவரின் சமூகவலைதள கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
எங்கள் பேட்சில் மொத்தமுள்ள 9 பேரில் அவர் ஒருத்தர் மட்டுமே பெண். இருப்பினும் நாங்கள் நல்ல நட்புடன் இருந்தோம். பாடங்களுடன், எங்கள் உணவுகளையும் பகிர்ந்து சாப்பிடுவோம். இப்படி மறக்க முடியாத தருணங்களை கொண்ட, அதே அறையில் அவர் சடலமாக மீட்கப்பட்டதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை." என்றனர் கண்ணீருடன்












Click it and Unblock the Notifications