ரொம்ப கொடுமை.. உற்சாகமாக பாடிக் கொண்டிருந்தபோதே பலியான பிரபல பாடகர்.. திக், திக் காட்சி
Recommended Video
மங்களூர்: மனிதனுக்கு மரணம் என்பது எந்த நேரத்தில் நிகழும் என்பது தெரியாது. இது பிரபஞ்சத்தின் மிகப்பெரிய சஸ்பென்ஸ். ஆனால், கர்நாடகாவில் மேடை பாடகர் ஒருவருக்கு நேர்ந்த மரணம், நினைத்தாலே நெஞ்சத்தை பதற வைப்பதாக உள்ளது.
கர்நாடகாவில் புழக்கத்தில் உள்ள மொழிகளில் ஒன்று கொங்கணி. இந்த மொழியில் அருமையான பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம்பிடித்தவர், ஜெர்ரி போஜ்ஜோடி. 51 வயதுதான் ஆகிறது.
கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆங்காங்கு இந்த பண்டிகையையொட்டி இசைக் கச்சேரிகள் நடைபெறும். எனவே, ஜெர்ரியும் ரொம்பவே பிசியாக இருந்தார்.

சரிந்து விழுந்தார்
இப்படித்தான் மங்களூர் அருகே, பெஜாய் பகுதியில், செவ்வாய்க்கிழமை இரவு, நடைபெற்ற இசைக் கச்சேரியில், ஜெர்ரி போஜ்ஜோடி பங்கேற்று பாடிக் கொண்டிருந்தார். இசை ஒரு பக்கம், இசைக்க, மைக்கை பிடித்து, ரொம்பவே ஆர்வமாக பாடிக் கொண்டிருந்தார் ஜெர்ரி. எந்த ஒரு சலனமும் இன்றி, உற்சாகமாகத்தான் பாடிக்கொண்டிருந்தார், ஜெர்ரி. ஆனால், ஒரு கட்டத்தில், சில விநாடிகள் மட்டும் அவரது கண்கள் சொக்கிப்போயின. திடீரென, அப்படியே முன்நோக்கி சரிந்தார். மேடையில் பாதி உடலும், கீழே பாதி உடலுமாக அப்படியே விழுந்து கிடந்தார், ஜெர்ரி.

இறுதி காட்சி
கச்சேரியை பார்த்துக் கொண்டிருந்த, ரசிகர்கள் அப்படியே அதிர்ச்சியாகிவிட்டனர். அலறியடித்தபடி, ஜெர்ரியை நோக்கி ஓடிச் சென்று அவரை தூக்கி வைத்து, தட்டி எழுப்பி பார்த்தனர். ஆனால் ஜெர்ரியிடம் இருந்து எந்த ஒரு அசைவுமே வரவில்லை. அப்போதுதான், ஜெர்ரி இறந்து போனது தெரியவந்தது. இந்த இசைக் கச்சேரியை வீடியோவாக பதிவு செய்துகொண்டு இருந்தனர் ரசிகர்கள். அந்த வீடியோவில், இந்த இறுதிக் காட்சி பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைரல்
சோஷியல் மீடியாவில், ஜெர்ரியின் இறுதி நிமிட காட்சிகள், வைரலாக பரவி வருகின்றன. மனிதனின் வாழ்க்கைதான் எத்தனை விந்தனையானது, நிரந்தரமற்றது என்பதற்கு இதைவிட வேறு ஒரு வீடியோ சாட்சியாக இருக்க முடியாது. ஆனால், எத்தனையோ கனவுகளுடன் வாழ்ந்த, உற்சாகமாக பாடிக்கொண்டிருந்த ஜெர்ரிக்கு இப்படி ஒரு மரணம் ஏற்பட்டிருக்க கூடாது என்று ரசிகர்கள் கண்ணீர் சிந்துகிறார்கள்.

பிரபல கவிஞர், பாடகர்
ஜெரால்ட் ஓஸ்வால்ட் டிசவுசா, என்ற இயற்பெயர் இருந்தாலும், ஜெர்ரி போஜ்ஜோடி என்ற பெயரால்தான் இவர் பிரபலமானார். இவருக்கு லவினா என்ற மனைவியும், ஜெஸ்லிதா, ஜாய்ஸ்டன் மற்றும் லோகிதா என்ற குழந்தைகளும் உள்ளனர். இவர் இதுவரை 60க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி, பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications