கே.ஆர்.எஸ் அணையில் நீர் திறப்பு 40,000 கன அடியாக குறைப்பு
மைசூர்: கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்ததால் கர்நாடக அரசு கே.ஆர்.எஸ். அணையிலிருந்து தமிழகத்துக்கு 80 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், இன்று நீர் திறப்பு 40 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வருவதால், நேற்று கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து தமிழகத்துக்கு காவிரியில் 1.17 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால், ஒக்கேனக்கல் பகுதியில் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒக்கேனக்கல்லில் 1 லட்சம் கன அடிக்கு மேல் நீர் வந்தது. இதனால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் 102 அடியைத் தாண்டியது. மேட்டூர் அணை 102 அடிகளைத் தாண்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். பின்னர், கே.ஆர்.எஸ். அணையிலிருந்து நீர் திறப்பு 80 ஆயிரம் கன அடி நீராகக் குறைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று புதன்கிழமை காலை கே.ஆர்.எஸ். அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 80 ஆயிரம் கன அடியிலிருந்து 40 ஆயிரம் கன அடி நீராக குறைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு குறைந்தாலும் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து குறைந்தாலும் அணையிலிருந்து நீர் திறப்பது மேலும் குறைக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.