கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் வாபஸ்!
பெங்களூரு: கர்நாடக அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கங்கள் நடத்தி வந்த வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கர்நாடக அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் ஜூலை 24-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் வெளி மாநிலங்கள், வெளியூர் செல்லும் அரசு பேருந்துகள் மட்டுமின்றி, பெங்களூர் நகர சிட்டி பஸ் சர்வீசான பிஎம்டிசி உள்ளிட்டவற்றின் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தது. ஸ்டிரைக்கிற்கு ஒத்துழைக்காமல் இயக்கப்பட்ட பஸ்கள் மீது கல் வீச்சு நடந்துள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் ஓடாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தினால் மாணவ-மாணவிகள் பாதிக்கப்படாமல் இருக்க கர்நாடக மாநிலத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு இந்த வாரம் திங்கட்கிழமை, செவ்வாய்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை விடப்பட்டது.
இருப்பினும் மூன்றாவது நாளான இன்றும் பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் பல இடங்களில் திறக்கப்படவில்லை. இந்நிலையில், கர்நாடக மாநில அரசு போக்குவரத்து துறையை சேர்ந்த நான்கு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் காலவரையற்ற போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.
தொழிற்சங்கத்தினரும், போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் தரப்பினரும் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் சுமூகமான உடன்பாடு எட்டப்பட்டது.
அரசு தரப்பில் 12.5 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க ஒப்புக் கொண்டதை அடுத்து போக்குவரத்து ஊழியர்கள் இந்த முடிவினை அறிவித்துள்ளனர். முன்னதாக 8 சதவீதம் மட்டுமே அளிக்கப்படும் என்று முதலில் கர்நாடக அரசு தெரிவித்திருந்தது. ஆனால் போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் 35 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications